நிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்!
வாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரேல் அனுப்பிய விண்கலம், நிலவில் மோதி விழுந்து, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு வாரத்துக்கு முன் பெரேஷீட் என்ற பெயரிலான விண்கலத்தை தனியார் நிதியுதவியுடன், இஸ்ரேல் நிலவுக்கு அனுப்பியது. நிலவில் படங்களை எடுப்பது, மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
ஆனால், நிலவில் தரையிறங்கும் நேரத்தில், விண்கலத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது நிலை தடுமாறி, நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதில் நிலவின் மேற்பரப்பில் சிறு, சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை, இந்த முயற்சி வெற்றியில் முடிவடைந்திருந்தால், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இணைந்திருக்கும்.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையில், இந்த நிகழ்வுகளை பார்த்த, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாம் வெற்றி பெறாவிட்டால், மீண்டும் முயல வேண்டும் என்பதே பொருள் என கூறியுள்ளார். இதன் மூலம், மீண்டும், விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபடப்போவது உறுதியாகியுள்ளது.