ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்காவின் சூப்பர் வெற்றி.. பின்னணியில் பல வியூகம்!
வாஷிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க பெரிய வெற்றி என்று சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை, ஆப்ரஹாம் ஒப்பந்தம் (Abraham Agreement) என்றழைத்தார் டொனால்ட் ட்ரம்ப். கிறிஸ்தவம், இஸ்லாம், யூதர்கள் ஆகிய மதப் பிரிவினருக்குமான பொதுவான பெயர் ஆபிரகாம். மும்மதமும் மதிக்கும் பெயர். எனவேதான் மூன்று தரப்பையும் இணைக்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்திற்கு அவ்வாறு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் எப்படி பயன்படும் என்று பார்க்கும் முன்பாக.. இஸ்ரேலுக்கும், அரபு அமீரகத்திற்கும் ஏன் இப்போது அமைதி ஒப்ந்தம் தேவைப்பட்டது. அவர்களுக்கு என்ன தகராறா இருந்தது? என்பதை பற்றி சுறுக்கமாக பார்த்துவிட்டு மேட்டருக்கு போய்விடலாம்.
இஸ்ரேல் வரலாறு
1948 ஆம் ஆண்டுதான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இதில் இஸ்ரேல் வென்றது. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதெல்லாம் உங்களுக்கு தெரியும்.
அமைதி
1979ம் ஆண்டு எகிப்தும், 1994ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்தன. ஆனால், ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்குள் நுழைய முடியாது. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, 2010ம் ஆண்டு ஹமாஸ் இயக்க ராணுவ அமைப்பின் துணை தலைவரான முஹ்மது அல் மெக்ஹ் என்பவர் துபாயில் வைத்து கொல்லப்பட்டார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாட் இதன் பின்னணியில் இருந்தது என்று ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் விரிசலடைந்தது. இந்த பின்னணியை வைத்து பார்க்கும்போது, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், ஒரு மைல் கல் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவுக்கு லாபம்
அதேநேரம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் சொல்லலாம். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுமே நீண்டகாலமாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட கூடிய நாடுகள். இந்த இரண்டு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வருவதன் மூலமாக கண்டிப்பாக அமெரிக்காவுக்கு ஆதாயம் கிடைக்கும்.
ஈரானுக்கு எதிரான வியூகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலஸ்தீனியர்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்புகளை, இஸ்ரேல் கைவிடும், கட்டாய குடியேற்றங்களை நிறுத்தும் என்ற ஷரத்துக்களுடன் கூடிய இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. ஈரான் நேரடியாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து வருகிறது. பல்வேறு ஜிகாதி குழுக்களும் ஆதரவளித்து செயல்படுகின்றன. இந்த நிலையில் இதுவரை இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டாமல் இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டு வருவதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் ஈரானை தனிமைப் படுத்தியதுபோல் ஆகிவிடும்.
ராஜதந்திர வெற்றி
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் அண்டை நாடுகளை கொண்டே ஈரானை தனிமைப் படுத்தியது அமெரிக்காவின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று பார்க்கலாம். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஈரான் கடுமையாக அப்செட் அடைந்திருக்கும். இது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி தகவல். இனி எல்லாவற்றையும் தாண்டி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல் முடிவுக்கு வருவதற்கான துவக்கப் புள்ளியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு ஒரு அமைதி நிலவினால் அதன் பெருமை அமெரிக்காவைதான் சேரும்.