அமெரிக்க கலவரம்.... வன்முறையாளர்களை தேசபக்தர்கள் என்று அழைத்த இவாங்கா
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் நபர்களை, தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டுள்ள டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பதிவிட்ட டிவீட்டிற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
அடுத்த அமெரிக்க அதிபராக ஜோ பைடனையும் துணை அதிபராகக் கமலா ஹாரிசையும் முறைப்படி தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தேச பக்தர்கள்
இத்தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்க டிரம்ப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். வன்முறையாளர்களைத் தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டுள்ள இவாங்கா, வன்முறையில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமைதியாகப் போராட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
ட்வீட் டெலிட் செய்த இவாங்கா
இவாங்காவின் இந்த டிவீட்டிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வன்முறை காரணமாக நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், அவர்களை எப்படி தேசபக்தர்கள் என்று அழைப்பது எந்த விதத்தில் சரி என்றும் பலரும் இவாங்காவை டிவிட்டரில் விமர்சித்தனர். இதையடுத்து அவர் அந்த டிவீட்டை டெலிட் செய்துவிட்டார்.
அமைதியான எதிர்ப்பே தேசபக்தி
இவாங்காவின் கருத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து, அவர் தனது மற்றொரு ட்வீட்டில் இவாங்கா, "அமைதியான எதிர்ப்பே தேசபக்தி. வன்முறை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வன்முறை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற வேண்டும்
வன்முறையாளர்கள் உடனடியாக அமெரிக்க நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று துணை அதிபர் பைக் பென்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் அனைவரும் காவலர்களை மதிக்க வேண்டும். உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேற வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்துவது என்பது ஒவ்வொரு அமெரிக்கரின் உரிமையாகும். ஆனால் நமது நாடாளுமன்ற கட்டடத்ததை தாக்குவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்படாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.