கடவுள் ஜோ பிடனுக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பார்... இவாங்கா ட்ரம்ப் வாழ்த்து!
வாஷிங்டன்: அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இவாங்கா ட்ரம்ப், கடவுள் அவருக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தருவார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க குடும்பங்களுக்காக போராட வாஷிங்டனுக்கு வந்தேன், அதைச் செய்து முடித்து விட்டேன் என்று உணர்வதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக நாங்கள் செய்துள்ளதை எண்ணி பெருமை கொள்வதாகவும் இவாங்கா ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜோ பிடன் இன்று பதவியேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இவாங்கா ட்ரம்ப் பிரியாவிடை
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து பிரியா விடை பெற்றுச் சென்றார்.
மக்களுக்காக போராடினேன்
இந்த நிலையில் இவாங்கா ட்ரம்ப் அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா அதிபரின் ஆலோசகராக பணியாற்றியது என வாழ்நாளின் சிறந்த தருணமாகும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக நாங்கள் செய்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். அமெரிக்க குடும்பங்களுக்காக போராட வாஷிங்டனுக்கு வந்தேன், அதைச் செய்து முடித்து விட்டேன் என்று உணர்கிறேன்.
கடவுள் மனஉறுதி கொடுப்பார்
நேர்மறையான வழியில் அமெரிக்கா பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நான்கு ஆண்டுகள் நல்லதொரு பயணமாக அமைந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். மற்ற நாடுகள் என் மீதும் அமெரிக்கா மீதும் காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. ஜோ பிடன், கமலா ஹாரிஸ் மற்றும் அவர்களது துணைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடவுள் ஞானத்தையும், தைரியத்தையும் பலத்தையும் தருவார். மன உறுதியையும் கொடுப்பார். அமெரிக்க குடிமக்களாகிய நாம் அனைவரும் பிடன் நிர்வாகம் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இவாங்கா ட்ரம்ப் தெரிவித்தார்.