1000 போட்டால், 2 ஆயிரம் வரும்.. ஒபாமா, பில்கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து பிட்காயின் மோசடி
வாஷிங்டன்: ஜோ பிடன், பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிட் காயின் குரூப், அதில் பிட்காயின் முகவரிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு $ 1,000 டாலருக்கும் 2,000 டாலர்கள் அனுப்புவதாக போலி டுவீட்டுகளை பதிவிட்டது தெரியவந்துள்ளது.
பிட் காயின் கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக கலைஞர்கள் தொழில்நுட்ப நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்திருக்கின்றன.
குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க், ஜோ பிடன், மைக் ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பில்லியனர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்
விரைவில் நீக்கம்
பிட்காயின் முகவரிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு $ 1,000 டாலருக்கும் 2,000 டாலர்கள் அனுப்புவதாக போலி டுவீட்டுகள் அவர்களின் ட்விட்டரில் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த போலி ட்வீட்டுகளை ஸ்கிரீன் சாட் மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது. அனைத்து போலி ட்வீட்டுகள் விரைவிலேயே நீக்கப்பட்டிருக்கிறது.
ஹேக் செய்யப்பட்டது
பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட தகவல்கள் தங்களுக்கு வந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், சரிசெய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மீண்டும் ட்விட்
இதனிடையே ட்விட்டர் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட சிலமணி நேரத்தில் பெரும்பாலானோரின் ட்விட்டர் கணக்குள் இயல்பு நிலையை அடைந்துவிட்டன. பெரும்பாலான கணக்குகளில் மீண்டும் ட்வீட் செய்ய முடிந்தது.
பாதுகாப்பு குறை
முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது ட்விட்டரின் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடான சம்பவமாக கருதப்படுகிறது. பல உலகத் தலைவர்கள் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற சிலர் முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்க ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் போன்ற தலைவர்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து தவறான தகவல்கள் பதிவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.