ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. டெரிக் சாவின் குற்றவாளி.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. பிடன்
கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் முக்கியமான அறிவிப்பு என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் முக்கியமான அறிவிப்பு என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
Recommended Video
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.
அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 காவலர்கள் வந்தனர். புகார் தொடர்பாக விசாரிக்க ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்கு அழைத்தனர்.அப்போது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து காவல்துறை அதிகாரி டெரிக் சாவின், ஆத்திரத்தில் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை காலை எடுங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
இனவெறிக்கு எதிராகவும் காவல்றையினரைக் கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 காவலர்கள் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 14.35 கோடி பேர் பாதிப்பு -30.56 லட்சம் பேர் மரணம்
இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நீதிமன்ற அறிவிப்பு கருத்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமெரிக்க நீதி வரலாற்றில் மிகமுக்கியமான படி என்று என்று கூறினார். இது பகல் முழு வெளிச்சத்தில் நடந்த ஒரு படு கொலை, என்று கூறியுள்ள பிடன் இனவெறி என்பது நாட்டின் ஆன்மாவுக்கு ஒரு கறை என்று தெரிவித்தார்.
ஃபிளாய்ட் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்காவில் காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் சிவில் உரிமைகள் இயக்கத்திற்குப் பின்னர் நாடு கண்டிராத ஒன்று என்றும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்ததாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.
ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோ பிடன் சாலையில் நடந்து சென்ற ஒரு கறுப்பின சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்டார். ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவம் நடைபெற்றபோதே ஜோ பிடன் என்னுடைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்து இருந்தார். அதையொட்டி ஒரு கறுப்பினச் சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டதோடு மனிதநேயத்திற்கு திரும்ப வேண்டும் என ஒரு அறிக்கையையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துணிச்சலான இளம் பெண்ணை பாராட்டிய பிடன், இந்த வழக்கில் வழக்குத் தொடர்ந்ததற்கு சாட்சியமளித்த காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டினார். காவல்துறை அதிகாரிகளின் பொறுப்புணர்வை இந்த தீர்ப்பு அதிகரிப்பதாகவும் பிடன் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், நீதியின் ஒரு அளவு சம நீதிக்கு சமமானதல்ல. இந்த தீர்ப்பு எங்களுக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்று ஹாரிஸ் கூறியுள்ளார்.