டிரம்புடன் 'இந்த' விஷயத்தில் மட்டும் ஒத்துப்போகும் பைடன்.... அமெரிக்கர்களின் நலன் கருதி முடிவு
வாஷிங்டன்: டிரம்ப் கூறியதைப் போல 600 டாலர் நிவாரண நிதி போதாது என்றும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2000 டாலர் வழங்க வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இருப்பது அமெரிக்காதான். உயிரிழப்பைத் தாண்டி, பொருளாதார ரீதியாகவும் அந்நாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1930களில் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சிக்குப் பின், தற்போது கொரோனா காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகக் பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டது. லட்சக் கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்தனர்.
நிவாரண மசோதா
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்ய டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு டிரில்லயன் டாலர் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். அதேபோல கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கும் முதல்கட்ட நிவாரண நிதி கடந்தாண்டு வழங்கப்பட்டது.
கையெழுத்திட மறுத்த டிரம்ப்
இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மீண்டும் கொரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு நபருக்கு 600 டாலர் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிவாரண நிதி போதாதது என்றும் மக்களுக்கு 2000 டாலர் வழங்க வேண்டும் என்றும் கூறி, இந்த மசோதாவில் கையெழுத்திட டிரம்ப் மறுத்துவிட்டார்.
டிரம்ப் கருத்தை ஏற்கும் பைடன்
இந்நிலையில், அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடனும் டிரம்ப் கூறியே கருத்தையே வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே இதுவரை எந்த கருத்திலும் ஒத்துப்போனதில்லை, ஆனால் இதில் மட்டும் இருவருக்குமான கருத்து ஒத்துப்போகியுள்ளது. 600 டாலர் என்பது மிகவும் குறைவான தொகை என்று கூறிய பைடன், இதை வைத்து வாடகை அல்லது உணவு என ஒன்றைத்தான் செய்ய முடியும் என்றும் அமெரிக்கர்களுக்குத் தற்போது 2000 டாலர் நிவாரண நிதியே தேவை என்றும் அவர் கூறினார்.
டிரம்பின் ஆசைக்குத் தடை போட்டது யார்
டிரம்ப் இந்த நிவாரண மசோதாவுக்குக் கையெழுத்திட மறுத்த போதே, நிவாரண நிதியை 2000 டாலராக உயர்த்தும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மேல் சபையில் குடியரசு கட்சியினருக்குப் பெரும்பான்மை இருந்தது. டிரம்பின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது சொந்தக் கட்சி எம்பிகளே அப்போது தடையாக இருந்தனர். நிவாரண நிதியை 2000 டாலராக உயர்த்தும் மசோதாவை குடியரசு கட்சி எம்பிகள் நிராகரித்தனர்.
கொடுக்க முடியுமா
ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜார்ஜியா தேர்தலுக்குப் பின் தற்போது மேல் சபையில் இரு கட்சிகளுக்கும் சரிசமமான எம்பிகள் உள்ளனர். இதனால் துணை அதிபர் பெரும்பான்மையை முடிவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸே உள்ளார். இதனால் ஜோ பைடன் விரும்பும் சட்டங்களை எளிதில் நிறைவேற்றலாம். வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்றவுடன் பைடன் இந்த மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.