சீனா எங்களுக்குப் போட்டியாளர் தான்... எதிரி இல்லை... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பஞ்ச்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சீனா போட்டி நாடு தானே தவிர எதிரி நாடு இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக மென்மையான போக்கைக் கையாண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்ப், சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தன. இரு நாடுகளும் கிட்டதட்ட வணிக போரிலேயே ஈடுபட்டிருந்தது என்று கூறலாம்.
சீன அதிபருடன் பேசவில்லை
இந்நிலையில், தற்போது பைடன், அதிபராகப் பதவியேற்றுள்ள நிலையில், சீனாவுடனான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அதிபர் பைடன் பேட்டி அளித்திருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உரையாடினீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இல்லை. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் இதுவரை நான் அவரிடம் பேசவில்லை
போட்டியாளர் தான், எதிரி இல்லை
அவர் மிகவும் கடினமான நபர். அவரிடம் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. விமர்சனமாக இதை நான் கூறவில்லை ஆனால் இதுதான் உண்மை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருக்கத் தேவையில்லை. ஆனால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தீவிர போட்டி இருக்கப் போகிறது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என்றும் அவர் கூறினார். சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் சீனாவும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்பை போலச் செயல்பட மாட்டேன்
மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பை போல தான் செயல்படப் போவதில்லை என்றும் சர்வதேச விதிகளை முறையாகப் பின்பற்றியே செயல்படுவேன் என்றும் பைடன் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது. சீனாவுக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவந்தார். கொரோனா வைரசை சீனா திட்டமிட்டுப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதைச் சீன வைரஸ் என்றே நீண்ட காலமாகக் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் vs பைடன்
இருப்பினும், அமெரிக்க அதிபராகா பைடன் பதவியேற்றதும் டிரம்பின் பல்வேறு உத்தரவுகளை அவர் ரத்து செய்து வருகிறார். பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைந்து செயல்படும் என்று உத்தரவிட்டிருந்தார். அதேபோல இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கினார். இதேபோல சீனாவுடனான அணுகுமுறையையும் அமெரிக்கா விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது சொந்த நலன்களை முன்னுரிமை அளிக்கும் என்பதையும் டிரம்புடன் நெருக்கமாக உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.