Cult Figure-ஆக உருவாகிறாரா டிரம்ப்? உருமாறுகிறதா அமெரிக்க அரசியல் கலாச்சாரம்?
வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள சூழலில், விழா அரங்கிற்குள் துப்பாக்கியுடன் எண்ணற்ற வெடிப் பொருட்களை கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே முகம் சுளிக்கும் சம்பவம் அமெரிக்காவில் சமீபத்தில் அரங்கேறியதை நாம் அறிந்திருக்காமல் இருக்க முடியாது. இத்தனை ஆண்டு கால அமெரிக்க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு 'வேட்டிய மடிச்சு கோதாவில் இறங்கிய சம்பவம்' அரங்கேறி இருக்கிறதா என்றால், தலையை உயர்த்தி விட்டத்தை பார்க்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.
இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் அமைந்த அந்த நிகழ்வு டிரம்ப் ஆதரவாளர்களால் போர்க்களமான US Capitol சம்பவம் தான்.
உலகமே கூர்ந்து கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. குடியரசுக் கட்சி சார்பில் நடப்பு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். கொரோனா பாதிப்பில் உச்சத்தில் உள்ள நாடு என்பதால், வாக்காளர்கள் பலரும் தங்கள் வாக்குகளைத் தபால் முறையில் செலுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான வாக்குகள் இம்முறை அமெரிக்காவில் பதிவானது. தபால் வாக்குகளே அரங்கை நிறைத்ததால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
முடிவில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட, அந்த நொடி முதலேயே ஆட்டத்தை தொடங்கினார் டிரம்ப். தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பல்வேறு மாகாணங்களின் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தார்.
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் வெற்றியாளர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ஜோ பைடன்தான் அடுத்த அதிபர் என்பது உறுதியானது.
இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 6ம் தேதி ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்று வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள செனட் கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது செனட் நோக்கி வந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பைடன் வெற்றிக்கு எதிராக கோஷமிட, பக்காவாக ஸ்க்ரிப்டட் செய்யப்பட்ட பிளான் போல, அதே வேளையில் வெள்ளை மாளிகையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் டிரம்ப். மன்னிக்க... சாவி கொடுத்து கொண்டிருந்தார் டிரம்ப்.
அப்போது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக 1445-வது தடவையாக குற்றம் சாட்டிய டிரம்ப், தேர்தல் முடிவுகளை தான் ஏற்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு, கோஷமிட்டுக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்த, 'குதிடா கைப்புள்ள' என்று US Capitol வளாகத்தை ஒரு கை பார்க்கத் தொடங்கினர்.
அதே இடத்தில்... ஒரு ஜோடி நின்று கிஸ் அடித்துக் கொண்டிருக்க 'இந்த ரணகளத்திலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதோ-' ஃபீலிங் நமக்கு. அது தனிக்கதை.
பின் போலீஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழக்க, விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவையில் புகுந்த கலவரக்காரர் ஒருவர் அவைத் தலைவரின் உரை மேடையை கையில் தூக்கிச் சென்றது இண்டர்நேஷ்னல் டிரெண்டிங்கில் இடம்பிடிக்க, 'என்ன நடக்கிறது அமெரிக்காவில்' என்று கேட்டு உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அழைப்புகள் பறந்தன.
கலவரக்காரர்களால் நிலவரம் எல்லை மீற தேசிய பாதுகாப்புப் படையினரும், எஃப்.பி.ஐ அதிகாரிகளும் நிலைமையை படாதபாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சரி... 'ஒருவழியா பிரச்சனையை முடிச்சாச்சு; இனி அமைதியா பதவியேற்கலாம்' என்று நினைத்திருந்த ஜோ பைடனின் தூக்கத்தை குலைக்கும் வகையில் புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது.
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவுக்காக வாஷிங்டன் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் கார் ஒன்று வந்தது.
அப்போது அந்த காரை மடக்கி பாதுகாப்புப் படையினர் சோதனை செய்த போது, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாக கூறி, அழைப்பிதழ் ஒன்றையும் அந்த நபர் வழங்கியிருக்கிறார். ஆனால், அந்த அழைப்பிதழ் போலி என்பதை கண்டறிந்த போலீசார், காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கார் ஓட்டி வந்த நபரை உரிய விதத்தில் விசாரிக்க, அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கதிகலங்கி போயிருக்கிறார் ஜோ பைடன்.
இதனால், வாஷிங்டனில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் உடனடியாக மூடப்பட, முக்கிய தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Stardom கலாச்சாரத்தை உருவாக்குகிறாரா டிரம்ப்?
பொதுவாக அமெரிக்காவில் இருந்தது, இருப்பது என்னவோ இன்ஸ்டிடியூஷனல் பாலிடிக்ஸ் (Institutional Politics) எனலாம். அங்கே ஒரு நிறுவனமான அரசியல் கலாச்சாரமே இருந்து வந்தது. தனி மனித ஸ்துதி, stardom என்று எதுவும் பெரிதாக இருக்காது. அதாவது, கட்சியின் வலிமையை விஞ்சும் வலிமை, அக்கட்சியைச் சேர்ந்த தனி மனிதர் எவருக்கும் இருக்காது.
இந்தியாவில் இருக்கும் 'ஒற்றைத் தலைமை' கேரக்டர்ஸ், தலைவர் இருந்தால் தற்கொலை செய்து கொள்வது போன்ற எந்த கோமாளித்தனங்களும் அங்கு இருக்காது. எனினும், ரொனால்ட் ரீகன் காலத்தில் அப்படியொரு தனி மனித ஆராவாரம் இருந்தது. ஆனால், அதன்பின் ஒபாமா வரை தலைமையேற்று வழிநடத்திய எந்தவொரு அதிபரும் கட்சியைத் தாண்டி பெரிதாய் தெரியவில்லை.
ஆனால், டிரம்ப் இந்த நிலைமை மாற்றியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. செனட் உள்ளே குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாகவோ அல்லது ஜனநாயக கட்சி எதிர்ப்பாளர்களாகவோ எவரும் நுழையவில்லை. அவர்கள் டிரம்ப் வெறியர்களாக நுழைந்தனர். டிரம்ப் வார்த்தைகளால் உணர்ச்சிவயப்பட்டு கலவரக்காரர்களாக உருவெடுத்தனர்.
டிரம்ப் மீதான அத்தனை கருத்துக்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால், உண்மையில் டிரம்ப் நிகழ்த்தியிருப்பது சாதனை தான் என்று சொல்லாம்.
அமெரிக்க அரசியல் பக்கங்களில் 'தனி நபர் ஸ்துதி' எனும் ஒரு புது அத்தியாயத்தை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.
தனக்கென ஒரு தனி கூட்டத்தை உருவாக்கி வைத்து, அவர்கள் மனதில் 'இது டிரம்ப் நினைத்தால் தான் முடியும்' என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து ஒரு 'Cult Figure'-ஆக தன்னை உருவகப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதே நிதர்சனம்.
இதன் நீட்சி இப்போது, ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு தைரியமாக ஒருவர் இத்தனை தோட்டாக்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிவிடலாம் என்ற அசட்டு தைரியத்துடன் நுழைய வைத்திருக்கிறது.
இது எங்கே போய் முடியப் போகிறதோ!!