ஜோ பிடன், கமலாஹாரிஸ் பதவியேற்பு விழா - வாஷிங்டனை அலங்கரிக்கும் வண்ண கோலங்கள்
அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ் பதவியேற்கிறார். புதிய அதிபர், துணை அதிபரை வரவேற்கும் விதமாக வாஷிங்டன் நகரை வண்ண கோலங்களா
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிசை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றன. வாஷிங்டன் நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அங்கு வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாரம்பரியமான முறையில் வண்ண வண்ண கோலங்களை வரைந்து வருகின்றனர்.
கோலம் இந்தியர்களின் பாரம்பரிய அடையாளம், இன்றைய கால கட்டத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அழகாக கோலம் போட கற்றுக்கொண்டுள்ளனர். மார்கழி மாதத்தில் வண்ண கோலங்களை வீட்டு வாசல்களில் வரைந்து இறைவனை வரவேற்பார்கள்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாட்களில் இன்றைக்கும் பல கிராமங்களில் கோலப்போட்டி நடத்தப்படுகிறது. பாரம்பரியம் மிக்க கோலங்கள் இப்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரங்களை அலங்கரிக்க உள்ளன.
ஜோ பிடன் வெற்றியும் கலவரமும்
நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் தற்போதய அதிபர் டிரம்பை தோற்கடித்து வெற்றி பெற்றார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன். துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ். டிரம்ப் ஒருவழியாக தோல்வியை ஒப்புக்கொண்டாலும் அவரது ஆதரவாளர்கள் யாரும்
தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கேப்பிட்டல் ஹில் கட்டிடத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 20ல் பதவியேற்பு
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார் ஜோ பிடன். அமெரிக்காவில், துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற இருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
முழு கட்டுப்பாட்டில் வாஷிங்டன்
ஜோ பிடன் பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு
படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வரவேற்கும் வண்ண கோலங்கள்
நகரமே உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்தாலும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பில், டைல்ஸ் களை பயன்படுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரம்மாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர். இதை அமெரிக்கா முழுவதுமிருந்து 1,800க்கும் அதிகமானோர் இணைந்து உருவாக்கி உள்ளனர். தமிழர்களின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றான கோலம் இப்போது உலக அளவில் பார்க்கப்பட்டு பேசப்படுகின்றது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தற்போது அமெரிக்காவின் புதிய அதிபருக்கான பதவி ஏற்பு விழாக்களில் கோலத்திற்கு ஒரு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.
கொண்டாடும் இந்திய மக்கள்
கமலா ஹாரிஸ் தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் வெற்றி பெற்றபோது அவரது சொந்த ஊரில் மக்கள் கோலமிட்டு அந்த வெற்றியைக் கொண்டாடினர் அதே போல வாஷிங்டன் நகரங்களிலும் வண்ண கோலங்களால் அலங்கரிக்க திட்டமிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்கள், குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான கோலங்களை இணைக்க ஆன்லைனில் ஒத்துழைத்தனர். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பத்து பொதுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கோலங்களை உருவாக்கும் பணியில் பங்கேற்றனர்.
நேர்மறை ஆற்றலின் தொடக்கம்
பதவியேற்பு விழாவில் கோலத்தை ஓர் அங்கமாக்கும் முயற்சியை தொடக்கி வைத்தவர் மேரிலாந்தைச் சேர்ந்த விருது பெற்ற மல்டிமீடியா மற்றும் பல்துறை கலைஞரான சாந்தி சந்திரசேகர். இது குறித்து பேசிய அவர், கோலங்கள் நேர்மறை ஆற்றலையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுடன் இவற்றை தங்கள் வீடுகளிலிருந்து உருவாக்க பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து வயதினரும் ஒத்துழைத்தனர்.
ஒரு உள்ளூர் திட்டமாகத் தொடங்கிய இந்த பணி எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு சென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
வரவேற்க தயாராகும் மக்கள்
வாஷிங்டன் டி.சி பொதுப் பள்ளிகளின் கலை இயக்குனர் மேரி லம்பேர்ட் மற்றும் விஷுவல் ஆர்ட்ஸ் கலை மேலாளர் லிண்ட்சே வான்ஸ் ஆகியோர் சாந்தி சந்திரசேகருடன் இணைந்து பல்வேறு பின்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களால் போடப்பட்ட கோலங்களை ஒன்றிணைத்துள்ளனர்.
கோலத்தை அனுப்பிய மக்கள்
தங்கள் எதிர்பார்ப்பை விட அதிக அளவில் மக்கள் இந்த கோல பணித்திட்டத்தில் கலந்து கொண்டதாக சௌம்யா கூறியுள்ளார். கலிபோர்னியா, பாஸ்டன், நியூ ஜெர்சி மற்றும் பல இடங்களிலிருந்து மக்கள் தங்கள் கோலங்களின் ஓடுகளை அனுப்பியுள்ளனர். முதியோர் இல்லங்கள், பகல்நேர கவனிப்பு இல்லங்கள் முதல் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
கோலங்களின் அணிவகுப்பு
புதிய நிர்வாகத்திற்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வந்துள்ள கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் அலங்கரிக்க முதலில் திட்டமிடப்பட்டது. வாஷிங்டன் டி.சி காவல்துறை பின்னர் அமைப்பாளர்களை
கேபிடல் ஹில் அருகே, பதவியேற்பு விழா நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி கோலங்கள் உள்ள ஓடுகளை வைக்க அனுமதி அளித்தது. எனினும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு பின்னர் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பிரம்மாண்ட கோலங்களின் வீடியோக்கள்
ஜோ பிடன், கமலா ஹாரிஸை வரவேற்கவும், அமெரிக்காவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், சனிக்கிழமையன்று கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த கோல ஓடுகளுக்கான இடமும் நாளும் தீர்மானிக்கப்படும் என்று கோலம் 2021 ஏற்பாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் சௌம்யா சோம்நாத் கூறியுள்ளார். இந்திய வாசல்களில் ஜொலித்த கோலங்கள் இனி அமெரிக்காவின் நகர வீதிகளில் அலங்கரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.