டிரம்ப்பை வீழ்த்த பைடனுக்கு கணக்கில்லாமல் நிதி... வாரி வழங்கிய மர்ம வள்ளல்கள்
வாஷிங்டன் : சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப்பை தோற்கடிப்பதற்காக, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கு கணக்கில்லாமல் அடையாளம் தெரியாத நபர்கள் நிதி வழங்கி, வெற்றி பெற வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இதுவரை எந்த அதிபர் வேட்பாளரும் வசூலிக்காத அளவாக 145 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்று புதிய சாதனையையே நிகழ்த்தி இருந்தார் பைடன். இந்த முழு தொகையையும் பொது மக்கள் அளிக்கவில்லை. அடையாளம் தெரியாத குழுவை சேர்ந்த பலர் அதிக அளவிலான தொகையை வழங்கி, பைடனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இப்படி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மட்டும் 28.4 மில்லியன் டாலர் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி தான் அதிகபட்சமாக 113 மில்லியன் டாலர்களை தேர்தல் நிதியாக பெற்றிருந்தார்.
பைடனின் தேர்தல் சுற்றுப் பயண வாகன செலவிற்காக மட்டும் 26 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து உண்மையில் பெறப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. பைடனின் தேர்தல் நிதி பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த போதிலும் அது பற்றி, பைடனின் செய்தி தொடர்பாளர் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.
இது பற்றி ஜனநாயக கட்சியினர் கூறுகையில், நாங்கள் கறுப்பு பணங்களை தடை செய்ய நினைக்கிறோம். இப்படி அடையாளம் தெரியாமல் வந்த பணமும் ஊழலுக்கு சமம். டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு இல்லாமல் ஆதரவாளர்கள் இந்த நிதியை பெற்றுள்ளனர்.
பைடனின் ஒவ்வொரு பிரசாரத்திற்கும் தனிநபர்களிடம் இருந்து மட்டும் தலா 2800 டாலர் வரை பெறப்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்கள் தாரளமாக காசோலை மூலமாக ஏராளமான நிதி அளித்ததும் கூட பைடனின் தேர்தல் இவ்வளவு அதிகம் வசூலானதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.