இந்தியாவுடன் நட்பு.. எச்-1 பி விசா மீதான தடை நீக்கப்படும்- அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அதிரடி
வாஷிங்டன்: எச் -1 பி விசாக்கள் மீதான தற்காலிக தடையை நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க துணை அதிபருமான ஜோ பிடன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நவம்பர் மாதம், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தான் வெற்றி பெற்றால், இப்போதைய ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த விசா மீதான தடையை நீக்குவேன் என்று அவர் கூறினார்.
அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 2020 இறுதி வரை எச் -1 பி விசாக்களையும் மற்ற வகை வெளிநாட்டு வேலை விசாக்களையும் நிறுத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு
ஆசிய விவகாரங்கள்
இந்த நிலையில்தான், என்.பி.சி நியூஸ் ஏற்பாடு செய்த ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவு (ஏஏபிஐ) பிரச்சினைகள் குறித்த டிஜிட்டல் டவுன் ஹால் கூட்டத்தில், ஜோ பிடன் பங்கேற்றார். அப்போது, எச் -1 பி விசாதாரர்களின் பணிப் பங்களிப்பைப் ஜோ பிடன் பாராட்டினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு முழுக்க எச் -1 பி விசாக்களை தரப்போவதில்லை என கூறுகிறார். ஆனால் எனது நிர்வாகத்தில் அப்படி இருக்காது என்று ஜோ பிடன் டவுன் ஹால் நிகழ்ச்சியில், ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் கூறினார்.
இந்திய ஐடி பணியாளர்கள்
அதிபராக பதவியேற்றால், முதல் 100 நாட்களில் உங்கள் நிர்வாகம் என்ன செய்யும் என்று கேட்ட கேள்விக்கு, "நிறுவன விசாவில் உள்ளவர்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளதை மறக்க கூடாது" என்று தெரிவித்தார் பிடன். H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவாகும். அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை அழைத்துச் செல்ல இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த விசாவை நம்பியுள்ளன. இந்த நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த விசாவின்கீழ் பணிக்குச் செல்கிறார்கள்.
குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்
பிடன் மேலும் கூறுகையில், எனது குடியேற்றக் கொள்கை குடும்பங்களை ஒன்றாக வைத்திருப்பது, குடும்பங்களை ஒன்றிணைத்தல் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் குடியேற்ற முறையை நவீனமயமாக்குவது போன்றவற்றில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கலாச்சாரத்தில் இது முன்னர் இருந்ததுதான்.
கொடூரமான ட்ரம்ப் கொள்கை
டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் கொடூரமானவை. கிழக்கு மற்றும் தெற்காசியாவிலிருந்து 100,000 க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பணியாளர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பேன். முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை ரத்து செய்வேன், அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் வரலாற்றுத் தலைமை என்பது அகதிகளை அரவணைப்பதுதான். அதற்கு ஏற்ப அகதிகள் சேர்க்கையை நடத்த உடனடியாக உத்தரவிடுவேன்.
இந்தியாவுடன் நட்பு
பிராந்தியத்தின் அமெரிக்க பாதுகாப்பிற்காகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இரு நாடுகளும் இணைந்த தோழர்களாகத்தான் இருக்கும். நான் அதிபராக இருந்தால் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பேன். இந்தியா அமெரிக்காவுக்கு ஒரு இயற்கையான கூட்டாளி. செயற்கையாக நண்பனாக மாற தேவையே கிடையாது. இவ்வாறு ஜோ பிடன் தெரிவித்ததார்.