மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி... மாஸ் காட்டும் ஜோ பைடன்
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் ஜோ பைடன் மக்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது.
அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் போதிய நம்பிக்கை இல்லாததால், பொதுமக்கள் பலரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். மக்களின் நம்பிக்கை அதிகரிக்க அந்நாட்டு அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜோ பைடன்
இதையடுத்து அடுத்து அதிபராகும் ஜோ பைடன், மக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி கடந்த டிசம்பர் 21ஆம் தேதி டெல்வர் மாகாணத்தில் அவருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டது. இது தொலைகாட்சிகிளில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது.
இரண்டாவது டோஸ்
முதல் டோஸ் எடுத்துக்கொண்டு 3 முதல் 4 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் அளிக்கப்பட வேண்டும். அதன்படி ஜோ பைடனுக்கு இந்த வாரம் இரண்டாவது டோஸ் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜோ பைடன் இன்று தனது இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்வார் என்றும் அதுவும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் பணி
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக வயதானவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 67 லட்சம் பேருக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
உலகிலேயே கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2.29 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3.83 லட்சம் பேருக்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.