இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு- ஜோ பிடன் டீம் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படுவதாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் டீம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஜோ பிடனின் வெற்றியை ஏற்க முடியாது என டிரம்ப் அடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோ பிடனின் டீம் அதிரடியாக முதல் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவை அறிவித்துள்ளது.
இந்த குழுவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி தலைமை வகிப்பார். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் விவேக் மூர்த்தி. இங்கிலாந்தில் பிறந்தவர். ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் 19-வது சுகாதாரத்துறை தலைவராக இருந்தார். பின்னர் டொனால்ட் டிரம்ப்பால் பதவி விலகினார் விவேக் மூர்த்தி.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசார களத்தில் கொரோனா விவகாரங்களில் ஜோ பிடனுக்கு ஆலோசகராக இருந்தார் விவேக் மூர்த்தி. இதேபோல் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் கொரோனாவின் பேரழிவை முன்கூட்டியே தாம் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை என பரபரப்பு கிளப்பிய மருத்துவ துறை வல்லுநர் ரிக் பிரைட்டும் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கிறார். மொத்தம் 13 மருத்துவ துறைசார் வல்லுநர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் விவேக் மூர்த்தி?
உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,88,480. அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,43,768.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா பரவலைத் தடுக்க தவறிவிட்டார் டிரம்ப் என்கிற பிரசாரத்தை வலுவாக முன்னெடுத்தவர் ஜோபிடன். டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் மக்கள் சாகப்பழகிவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார் ஜோபிடன் என்பது குறிப்பிடத்தக்கது.