அடக்கடவுளே.. அமெரிக்காவில் கொரோனா மரணம் 6 லட்சத்தை தாண்டுமாம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 600,000-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
மேலும் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கும், அமெரிக்கர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கும் தனது 1.9 டிரில்லியன் டாலர் திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு அமெரிக்க காங்கிரஸை அதிபர் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், "வைரஸ் அதிகரித்து வருகிறது. நாம் ஏற்கனவே 400,000 பேரை இழந்துவிட்டோம். இழப்பு 600,000 தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பங்கள் பசியுடன் உள்ளனர். மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது. வேலை இழப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. நாம் இப்போது செயல்பட வேண்டும்... நாம் வேகமாக முன்னேற வேண்டும்.
நமது தாரக மந்திரம் இதுதான். நாம் ஒரு தேசிய அவசரநிலையில் இருக்கிறோம், நாம் ஒரு தேசிய அவசரநிலையில் இருப்பதைப் போல செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பைடனின் $1.9 டிரில்லியன் பட்ஜெட் கொண்ட அமெரிக்க மீட்பு திட்டம், கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க 400 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்குகிறது. இதன் மூலம் சிறு வணிகங்களுக்கான கூடுதல் நிதியும், அமெரிக்கர்களுக்கு நேரடியாக நிவாரணங்களும் வழங்கப்படும்.
ஆனால் அமெரிக்க காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு பெரிய பொருளாதார நிவாரண மசோதாக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், பைடனின் இந்த திட்டத்திற்கு தயக்கம் காட்டியுள்ளது.
எனவே, அதிபர் பைடன் தனது அமைச்சரவை பரிந்துரைகளை விரைவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கவும் செனட்டை நம்பியுள்ளார்.