வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க.. வழக்கு போட்டு வாங்கி கட்டும் டிரம்ப்.. பிலடெல்பியாவிலும் டிஸ்மிஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தேர்தல் தொடர்பான மற்றொரு வழக்கிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இம்முறை பிலடெல்பியா நீதிமன்றம், டிரம்ப் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆரம்பத்தில் டிரம்ப் முன்னிலை வகித்தார்.
ஆனால் இப்போது ஜோ பிடன் வெகு நெருக்கத்திற்கு முன்னேறியுள்ளார். இதே நிலை நீடித்தால், 20 ஓட்டுக்கள் கொண்ட பென்சில்வேனியாவை ஜோ பிடன் கைப்பற்றிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி ஒன்று நடந்தால், பிடன் அதிபராகிவிடுவார்.
டிரம்ப்பின் இடைவிடாத மோசடி புகார்கள்..உலக நாடுகளில் சந்தி சிரிக்கும் பெரியண்ணன் தேசத்து தேர்தல் முறை
கவுண்டி வாக்கு எண்ணும் மையம்
இந்த நிலையில்தான், பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட பிலடெல்பியா, கவுண்டியில், வாக்கு எண்ணுவதை நிறுத்த ட்ரம்ப் பிரச்சார குழு, நேற்று மாலை அவசர மனுவை பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவில், பிலடெல்பியா கவுண்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில், தங்கள் தரப்பு பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.
மனுவில் கூறியது என்ன
பிலடெல்பியா கவுண்டியின் தேர்தல் ஆணையம் "அதிபர் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் எந்தவொரு பிரதிநிதிகளையும் வாக்கெடுப்பு மையத்திற்குள் பார்வையாளர்களாக அனுமதிக்க மறுத்து வருகிறது. எனவே ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்" என்று டிரம்ப்பின் சட்டக் குழு அந்த மனுவில் கூறியது.
நீதிபதி சமரசம்
மாவட்ட நீதிபதி பால் டயமண்ட், இதை விசாரித்தார். அவர் கூறுகையில், ட்ரம்ப் தரப்பைச் சேர்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை பிடன் தரப்பு பார்வையாளர்களை விட குறைவாக உள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது. எனவே இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம், சரி சமமான பார்வையாளர்களை அமர்த்திக் கொள்ளுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
பல நீதிமன்றங்கள்
இதையடுத்து இரு தரப்பினருக்கும் தலா 60 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்தனர். எனவே வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆட்சேபனை தெரிவித்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கும், மிக்சினில் போடப்பட்ட வழக்கும் ஏற்கனவே, நிராகரிக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியாவிலும் நீதிமன்றம், டிரம்ப் கோரிக்கையை ஏற்கவில்லை.