பெசன்ட் நகரில் தாத்தா விதைத்த விதை...இன்று அமெரிக்க துணை அதிபர் போட்டியில்...கமலா ஹாரிஸ்!!
வாஷிங்டன்: முதன் முதலாக அமெரிக்காவின் துணை அதிபருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான அதுவும் தமிழ் பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். சென்னையில் இருந்து படிப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் பெர்க்லிக்கு சென்றார் கமலா ஹாரிஸ் தாய் சியாமளா கோபாலன். கமலா ஹாரிஸை பெண் ஒபாமா என்று அழைப்பதும் உண்டு.
Recommended Video
கலிபோர்னியாவில் இருந்து முதன் முறையாக அமெரிக்க செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் கமலா. சட்ட அமலாக்கத்துறையின் உயர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். இந்தியாவில் இருந்து முதன் முறையாக அதிபருக்கான தேர்தலில் நிற்பவரும் இவர்தான். இவர் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டால் முதல் பெண் துணை அதிபர் என்ற வரலாற்று சாதனையையும் அமெரிக்காவில் பதிவு செய்வார்.
இவருக்கு முன்பு இந்தப் பதவிக்கு ஜெரால்டைன் 1984ஆம் ஆண்டிலும், சாரா பாலின் 2008ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தனர். ஆனால், வரும் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் இவர் வெற்றி பெற்றால் துணை அதிபருக்கான பதவிக்கு வெற்றி பெறும் முதல் பெண் என்ற சாதனையை படைப்பார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியை அந்தப் பத்திரிகை மீண்டும் பதிவு செய்துள்ளது. அதில் அவர் ஸ்வராஸ்யமான தகவல்களை பறிமாறியுள்ளார்.
முதல் கருப்பின பெண்.. முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ்.. பிரபலங்களின் பூரிப்பும், பாராட்டுகளும்!
தாத்தா கோபாலன்
அந்தப் பேட்டியில், ''என்னுடைய தாய் எனக்கும், எனது சகோதரி மாயாவுக்கு எங்களது பண்பாடு குறித்து நன்றாக கற்றுக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் இந்தியா செல்வோம். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் எனது தாய் மற்றும் எனது தாத்தா. எனது தாத்தா பிவி கோபாலன் இந்தியாவில் அரசு உயர் பதவியில் இருந்தார்.
மெட்ராஸ்
எனது தாத்தா சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுத்தவர். அவரது ஓய்வுக்குப் பின்னர் நாங்கள் சென்னையில் இருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் நடந்து சென்று கொண்டே சுதந்திரப் போராட்டம் குறித்து பேசுவோம். எனது தாத்தா சுவையான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது சென்னை, மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது.
ஊழல் ஒழிப்பு
அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் எனது தாத்தாவுடன் பீச்சில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்வார்கள். அப்போது அவர்கள் அரசியல் குறித்து பேசுவார்கள். ஊழலை எவ்வாறு தடுப்பது என்று ஆலோசிப்பார்கள். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் உரையாடுவார்கள். அவர்களுக்குள் சிரித்து சிரித்து பேசி, கலந்துரையாடல் மேற்கொள்வார்கள். இதெல்லாம்தான் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பொறுப்புள்ள பெண்ணாக, நேர்மையான பெண்ணாக இருக்க வேண்டும் என்று தூண்டியது.
மனித உரிமை
உலகிலேயே இந்தியாதான் மிகவும் பழமையான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. இதன் தாக்கம் என்னிடம் உள்ளது. அதுதான் இன்று என்னை இந்தளவிற்கு உயர்த்திக் கொண்டு வந்துள்ளது. எனது தாத்தா, பாட்டி ஒவ்வொரு முறை பெர்க்லி வரும்போதும், அனைத்து தரப்பு மக்களுடனும் எளிதில் பழகி பேசுவார்கள். மனித உரிமை மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனித இனத்தில் ஒருவரை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போதுதான் பல விஷயங்கள் தெரிய வரும்'' என்று பகிர்ந்துள்ளார்.