அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டுவிட்டு.. பிரதமர் மோடி தங்கிய.. விருந்தினர் மாளிகையில் குடியேறிய கமலா
வாஷிங்டன்: துணை அதிபருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கமலா ஹாரிஸ் தற்காலிகமாக அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக கடந்த 20ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்க அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் அவர். தனது 39ஆவது வயதில் முதலில் எம்பியான ஜோ பைடன், படிப்படியாக முன்னேறி தற்போது அதிபராகியுள்ளார்.
அவருடன் அந்நாட்டின் 49ஆவது துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அதிகாரப்பூர்வ இல்லம்
பதவியேற்றதும் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறினார். அதேபோல கமலா ஹாரிஸும் அவரது அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் ஒன் அப்சர்வேட்டரி இல்லத்தில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இல்லம் வெள்ளை மாளிகையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
விருந்தினர் மாளிகையில் கமலா
ஆனால், அதற்குப் பதிலாக அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுஸில் கமலா ஹாரிஸ் குடியேறினார். துணை அதிபருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாலேயே கமலா ஹாரிஸ் தற்காலிகமாக அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1893 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட துணை அதிபரின் இல்லத்தில் சிம்னி உள்ளிட்ட சில பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளேர் ஹவுஸ்
துணை அதிபர் கமலா ஹாரிஸ் தற்போது தங்கியிருக்கும் பிளேர் ஹவுஸ் 1824ஆம் ஆண்டு முதலில் தனி இல்லமாகக் கட்டப்பட்டது. பின்னர், 1942ஆம் ஆண்டு அதிபரின் விருந்தினர் மாளிகையாக மாற்றியமைக்கப்பட்டது. பொதுவாக வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் முக்கிய தலைவர்கள் இந்த பிளேர் ஹவுஸில் தான் தங்குவார்கள். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்த போதும் இங்குதான் தங்கியிருந்தார்.
உட்சபட்ச பாதுகாப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையைப் போலவே இதுவும் மிக முக்கியமான கட்டடங்களில் ஒன்று. வெளிநாட்டுத் தலைவர்கள் தங்குவார்கள் என்பதால் எப்போதும் இங்கு உட்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளிநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் பதவியேற்பதற்கு முதல் நாள் இந்த மாளிகையிலேயே தங்குவார்கள்.