காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? கூகுள் மேப் பித்தலாட்டம்.. அம்பலமானது குட்டு!
வாஷிங்டன்: கூகுள் மேப்பில் இந்தியாவில் இருந்து பார்த்தால் காஷ்மீர் ஒருங்கிணைந்த பகுதியாகவும், பாகிஸ்தான், அமெரிக்க உள்பட மற்ற ஏனைய வெளிநாடுகளில் பார்த்தால் சர்ச்சையான பகுதியாகவும் தெரிகிறது. கூகுளின் இந்த பித்தலாட்ட வேலைகளை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
கூகுள் மேப் வரைபடம் உலகில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று நினைத்தால் நாம் தான் உலகின் பெரிய முட்டாள்.'
ஏனெனில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சர்வர், ஒரு நாட்டுக்கு ஒரு கொள்கை என கடைபிடிக்கும் கூகுள் சில தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறது.
கூகுளின் வேலைகள்
அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டுக்கு அந்தந்த மாநிலத்திற்கு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறது. எப்படி நடக்கிறது என்பது ஜம்மு காஷ்மீர் விவகாரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கூகுளின் இந்த வேலைகளை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர்
கூகுள் மேப் வரைபடத்தை இன்டர்நெட்டில் பார்த்தீர்கள் என்றால் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என நினைப்பீர்கள். ஆனால் அப்படி இல்லை. இந்தியாவில் இருந்து கூகுள் மேப்பை பார்த்தால், மொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தெரியும். அதாவது இந்திய அரசின் மேப்பை போலவே தெரியும்.
வாஷிங்டன் போஸ்ட்
ஆனால் இதே கூகுள் மேப்பை இந்தியாவை தவிர பிற நாடுகளில் இருந்து பார்த்தால் காஷ்மீரின் மொத்த மாநிலமும் புள்ளி வைக்கப்பட்ட கோடுகளால் வரையப்பட்டு இது சர்ச்சைக்குரிய பகுதி என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். இந்த விவகாரத்ததை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கை தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.
நியாயத்தை சொல்றோம்
இது குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார், அவர்கூறுகையில், அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகள் இருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் இந்திய சட்டப்படி வரைப்படம் இருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால் சர்ச்சைக்கு உரிய பகுதியை நியாயப்படி தெரிவிக்க வண்டும் என்ற நிலையான கொள்கையை கூகுள் பின்பற்றுகிறது. இதன் மூலம் யாருடைய நிலைப்பாட்டையும் உறுதி செய்யவில்லை. மேம்படுத்தப்பட்ட சரியான கூகுள் வரைப்படத்தை முடிந்த அளவுக்கு தெரிவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார்.