''விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல''... அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!
வாஷிங்டன்: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய அமைப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணியின்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.இந்த நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய அமைப்பின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வேளாண் சட்டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், ''நாங்கள் விவசாயிகள், பயங்கரவாதிகள் அல்ல" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்பாட்டக்காரர்கள் கைகளில் வைத்திருந்தனர்.