அந்த ஒரு ஏவுகணை சோதனை.. நடந்தது விபரீதம்.. கிம் ஜாங் உன் நிலை குறித்து வெளியான புது தகவல்
வாஷிங்டன்: ஏவுகணை ஏவுதல் சோதனையின்போது கிம் ஜாங் உன் காயமடைந்திருக்கலாம் என்று வட கொரியாவைச் சேர்ந்த முன்னாள் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
Recommended Video
ஏப்ரல் 15 ம் தேதி வட கொரிய அதிபர் கிம், ஆளும் கட்சியின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததில் இருந்து கிம் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியுள்ளன. இந்த வதந்திகள் பரவிய பிறகும் கூட கிம் பொதுவெளியில் தோன்றவேயில்லை.
ஏப்ரல் 14ம் தேதிதான், வட கொரியா ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. வசந்த பவனில், வடை சுடுவது போல, வட கொரியாவில், ஏவுகணை சோதனை என்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒரு நிகழ்வுதான்.
காயம்
அதேநேரம், இதற்கு அதிபர் அங்கீகாரம் தேவை. எனவே, ஏவுகணை சோதனை நடத்த, ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு கிம் ஜாங் உன் ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதன்பிறகுதான், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே, ஏவுகணை சோதனையின்போதுதான், கிம் காயமடைந்திருக்க கூடும் என்று முன்னாள் தொழிலாளர் கட்சி அதிகாரி லீ ஜியோங் ஹோ தென் கொரிய செய்தித்தாள் டோங்-எ இல்போவில் எழுதியுள்ளார்.
வீடியோ வெளியாகவில்லை
"ஏவுகணை ஏவுதலின் எந்த காட்சிகளும் மற்றும் போர் விமானங்களின் பயிற்சியும் அரசால் வெளியிடப்படாத நிலையில், இந்த சந்தேகம் அதிகரிக்கிறது. ஏவுகணை ஏவுதலின்போது, தீ காரணமாக ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்து நடந்திருக்கும் வாய்ப்பு இருப்பதை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி, தரையிலிருந்து மட்டுமல்லாது, விமானத்திலிருந்தும் ஏவுகணைகள் வீசப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பில்லை
இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து கிம் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் மவுண்ட் மியோஹைங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்ட அமெரிக்க ஊடக தகவல்களையும், கிம் மூளை சாவடைந்திருக்கலாம் இருக்கக்கூடும் என்று வெளியான தகவல்களையும் லீ நிராகரித்தார்.
டாக்டர்கள்
கிம் மவுண்ட் மியோஹைங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் கிம்மின் மருத்துவர்கள், தலைநகர் பியோங்யாங் நகரில்தான் உள்ளனர். எனவே, திடீரென வேறு மருத்துவர்களிடம் இதய அறுவை சிகிச்சை செய்ய தேவையே கிடையாது, என்கிறார், லீ ஜியோங் ஹோ.
நன்கு உள்ளார்
தென் கொரிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் சுங்-இன் மூன் நேற்று கிம் 'உயிருடன் இருக்கிறார்' என்றும் ஏப்ரல் 13 முதல் வொன்சானில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். கிம் இறந்துவிடவில்லை என்பதில் தனது அரசு உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.