ட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு
வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து "தனிப்பட்ட கடிதம்" ஒன்றைப் பெற்றதாக வட கொரிய அரசு செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
"கடிதம் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது" என்று கிம் அதை படித்த பிறகு திருப்தியுடன் கூறினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
பரம வைரிகளாக மாறியுள்ளன அமெரிக்காவும், வட கொரியாவும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையேயான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால், இருநாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் டிரம்பிடம் இருந்து, தனக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்று வந்துள்ளது என வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
"கடிதத்திலுள்ள உள்ளடக்கத்தை தீவிரமாக பரிசீலிப்பேன். டிரம்பின் அசாதாரண தைரியத்தை பாராட்டுகிறேன்" என்று கிம் அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
"அதிபர் டிரம்ப், கிம்முக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார், இரு தலைவர்களுக்கிடையில் கடித பரிமாற்றம் நடந்து வருகிறது" என்று, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் உறுதிப்படுத்தினார்.
இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப், கிம்மிலிருந்து தனக்கு கிடைத்த ஒரு "அழகான கடிதம்" கிடைத்தது என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதையடுத்து பதிலுக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எப்போது எழுதப்பட்டது, அதிலுள்ள முழுமையான அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
டிரம்ப், அடுத்த வாரம் தென்கொரியாவுக்கு செல்ல இருக்கும் நிலையில், அவர் கிம் ஜாங் அன்னுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது.