திடீரென வானத்தில் தெரிந்த "வெள்ளை பலூன்!" உளவு பார்க்க சீனா அனுப்பியதாக.. அமெரிக்கா பரபர புகார்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மீது சீனா பலூன் ஒன்று பரப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகின பல்வேறு நாடுகளுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கையே கையாண்டு வருகிறது. அண்டை நாடான இந்தியா உடனும் சீனா நல்ல ஒரு உறவை வைத்திருக்கவில்லை.. எல்லையில் மோதல் போக்கே தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்தியா உடன் மட்டுமின்றி பல நாடுகளுடன் இப்படி மோதல் போக்கையே அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா என்று இந்த இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி.. அதிரும் அமெரிக்கா.. போலீஸ் விசாரணை தீவிரம்
அமெரிக்கா சீனா
அதேபோல அமெரிக்கா உடனும் சீனாவுக்கு மோதல் போக்கே நிலவி வருகிறது. குறிப்பாக டிரம்ப் அதிபர் பதவியில் இருந்த போது இந்த மோதல் உச்சம் தொட்டது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை விதித்தன. சர்வதேச ஊடகங்கள் இந்த வரிப் போர் (tax war) என்று குறிப்பிடும் அளவுக்கு நிலைமை இருந்தது. அதன் பின்னர் பைடன் அதிபராகப் பதவியேற்ற பிறகு மோதல் போக்கு குறைந்த போதிலும் இன்னும் முழுமையாகப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. பல சீனா நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்து உள்ளன.
உளவு பலூன்
இதனிடையே சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்கா மேல் பறந்து வருவதாகவும் இதைக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும் அந்த பலூன், அமெரிக்காவில் உள்ள அணு ஆயுத தளங்களை கண்காணிக்க முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஃபோட்டோக்களும் இணையத்தில் வெளியாக வேகமாகப் பரவி வருகிறது. இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கில் பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுட்டு வீழ்த்தினால் பிரச்சினை
முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்படி, பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க உயர் ராணுவ அதிகாரிகள் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது குறித்து பரிசீலனை செய்தனர். இருப்பினும், அப்படிச் செய்தால் அது விழும்போது, கீழே உள்ள பலருக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதைக் கைவிட்டனர். இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத பெண்டகன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது சீனாவுக்குச் சொந்தமான பலூன் என்றும் ரகசிய தகவல்களைச் சேகரிக்கவே இது வந்துள்ளது என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம். நாட்டில் அணு ஆயுத ஏவுகணை இருக்கும் மால்ம்ஸ்ட்ராம் விமானப்படைத் தளத்திற்கு அருகே இந்த பலூன் காணப்பட்டது" என்றார்.
பாதுகாப்பு அதிகாரி
மேலும் இது தொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறுகையில், "இந்த பலூனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.. இந்த பலூன் தற்போது விமானங்கள் இயக்கப்படும் உயரத்திற்கு மேல் தான் சுற்றி வருகிறது. இப்போது இந்த பலூனால் தரையிலுள்ள மக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதேபோன்ற பலூன் நடவடிக்கை இருந்துள்ளது. முக்கிய தகவல்களை பலூன்கள் சேகரிக்காமல் இருக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தின் தீவிர தன்மையைச் சீன அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர்
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த வார இறுதியில் சீனாவுக்கு அரசு முறை பயணமாகச் செல்லவிருந்தார். இந்த பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் கூட இரு நாட்டு அதிகாரிகளும் இதற்குத் திட்டமிட்டே வந்தனர். அவரது பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் இந்த பலூன் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிளிங்கனின் பயணத் திட்டம் கேன்செல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்கா கண்காணிப்பு
அந்த பலூன் அமெரிக்க வான்வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நுழைந்ததாகவும் இருப்பினும் அதற்கு முன்பிருந்தே அமெரிக்க உளவுத்துறை அதைக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. மேலும், வெள்ளை மாளிகை உத்தரவிட்டால், பலூனை சுட்டு வீழ்த்துவதற்குப் போர் விமானங்களைத் தயாராக உள்ளதாகவும் இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அந்த முடிவு எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் பலூன் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதைத் தடுக்க ராணுவம் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பலூன் சுட்டு வீழ்த்தப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை.
சீனா
மேலும், சீன பலூனின் சைஸ் என்ன என்பது குறித்த தெளிவான தகவல்களும் இல்லை. இருப்பினும், மிக உயரத்தில் அது பரப்பதாகச் சொல்லப்பட்டாலும் கீழே இருந்தும் கூட பார்க்க முடிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தைவன், தென் சீன கடல், ஹாங்காங் எனப் பல விஷயங்களில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இப்படி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.