அமெரிக்கா வன்முறையை கண்டித்து ...வெள்ளை மாளிகை அதிகாரிகள் தொடர் ராஜினாமா!
வாஷிங்டன்: நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 4 பேர் இறந்து விட்டனர். டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
டிரம்ப் நிர்வாக அதிகாரி கல்வி செயலாளர் பெட்ஸி டிவோஸ், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலாளர் எலினோர் மெக்கான்ஸ்-கட்ஸ் ஆகியோர் உள்பட பலர் பதவியை ராஜினாமா செய்தனர்.
வன்முறை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வருகிற 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் நேற்று மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
கண்டனம்
அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர் ராஜினாமா
மேலும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ், மெலனியா டிரம்பின் தலைமைத் தலைவர் ஸ்டீபனி கிரிஷாம் ஆகியோர் ஏற்கனவே தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பெட்ஸி டிவோஸ்
இந்த நிலையில் டிரம்ப் நிர்வாக அதிகாரி கல்வி செயலாளர் பெட்ஸி டிவோசும் ராஜினாமா செய்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் வன்முறையை மேற்கோள் காட்டி கல்விச் செயலாளர் பெட்ஸி டிவோஸ் வியாழக்கிழமை இரவு ராஜினாமா செய்தார் என்று ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.
ஏற்றுக்கொள்ள முடியாது
இதேபோல் டிரம்பின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலாளர் எலினோர் மெக்கான்ஸ்-கட்ஸ் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார். நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும் பதவியில் இருப்பது எனது திட்டமாக இருந்தது, ஆனால் நேற்று மாலை எனது எண்ணம் திடீரென மாறியது. இந்த வன்முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மெக்கான்ஸ்-கட்ஸ் கூறியுள்ளார்.
ஆலோசனை
வியாழக்கிழமை ராஜினாமா செய்தவர்களில் போக்குவரத்துச் செயலாளர் எலைன் சாவ், வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமைத் தலைவர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சிறப்பு தூதர் மிக் முல்வானே ஆகியோரும் அடங்குவர். துணைப் பணியாளர் கிறிஸ் லிடலும் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.