டிரம்பிற்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி.. சந்திக்க மறுத்த தலைவர்கள்.. பயணத்தை ரத்து செய்த பாம்பியோ
வாஷிங்டன்: லக்சம்பர்க் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் சந்திக்க மறுத்ததால் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது ஐரோப்பிய பயணத்தை ரத்து செய்துள்ளார்,
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளவர் மைக் பாம்பியோ. உலக அரங்கில் மைக் பாம்பியோவுக்கு மிகவும் நல்ல பெயர் உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் பல்வேறு நாடுகளும்கூட மைக் பாம்பியோவுக்கு மரியாதை அளித்து வந்தனர். இதுவரை அவரது வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமாகவே இருந்ததுள்ளது.
டிரம்பை நீக்க மறுக்கும் பென்ஸ்..2024 தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதை தடுக்கும் ஜனநாயக கட்சி
ஐரோப்பியப் பயணம்
இந்நிலையில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவிருந்தார். லக்சம்பர்க் சென்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அசெல்போர்னை மைக் பாம்பியோ சந்திக்க இருந்தார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களையும் சந்திக்க இருந்தார். அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்பதற்கு முன் பாம்பியோவின் கடைசி பயணம் என்பதால் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது
பயணம் ரத்து
இருப்பினும், இந்தப் பயணம் தற்போது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. லக்சம்பர்க் வெளியுறவுத் துறை அமைச்சர் அசெல்போர்ன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்கள் பலரும் மைக் பாம்பியோவைச் சந்திக்க மறுத்ததாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்தே மைக் பாம்பியோவின் ஐரோப்பியப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திக்க மறுப்பு
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு அசெல்போர்ன் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். டிரம்ப் ஒரு குற்றவாளி என்று விமர்சித்த அசெல்போர்ன், டிரம்ப் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரே ஜனநாயகத்தைக் காக்கச் சிறிதும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். மேலும், இத்தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலைப் போன்றது என்றும் விமர்சித்திருந்தார்.
அமெரிக்கா விளக்கம்
மைக் பாம்பியோவின் ஐரோப்பியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஐரோப்பியத் தலைவர்கள் சந்திக்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம் தர மறுத்து விட்டது. மாறாக, தற்போது புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கத் தேவையான பணிகள் நடைபெறுவதாகவும் இதன் காரணமாகவே பாம்பியோவின் ஐரோப்பியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.