சுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் மேப்பை நம்பி ரூட்டை மாற்றிய கார் ஓட்டுநர்கள் சகதியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
நவீன காலத்தில் கூகுளின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் நம் கையில் உள்ள செல்போன். இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் அறிந்து கொள்ளும் வசதிகள் வந்துவிட்டன. ஆண்டிராய்டு போன் இருந்தால் போதும், உலகை உள்ளங்கையில் பார்க்கலாம் என்ற அளவிற்கு சுருங்கி விட்டது.
கொலரேடோவில் உள்ள டென்வர் சர்தேச விமான நிலையத்துக்கான சென்று கொண்டிருந்த ஓட்டுநர் கோன்னீ (Connie) என்பவருக்கு கூகுள் மேப் டீ-டூர் எனும் பெயரில் மாற்று வழி இருப்பதாகக் கூறி அறிவுறுத்தியது. 43 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு 23 நிமிடங்களில் சென்று விடலாம் எனக் காட்டியதை அடுத்து ஓட்டுநர் கோன்னீ தனது பாதையை மாற்றினார்.
சற்று நேரத்தில் பொது வழியற்ற தனியார் சாலையில் தன்னைப் போன்றே பாதையை மாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வாகனங்கள் சகதியில் மாட்டிக் கொண்டது தெரியவந்தது. கூகுள் மேப்பை நம்பி தவறான முடிவெடுத்துவிட்டதாக ஓட்டுநர்கள் புலம்பித் தள்ளினர். சகதியில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப் பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் தவித்தனர்.
குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். உறவினர்களை அழைக்க வேண்டும், தொழில் சம்பந்தமாக செல்ல வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு, குழப்பத்தை கொடுத்து, கூகுள் மேப் ஒரு வழி செய்துவிட்டது.
கூகுள் மேப்பில் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும் போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம், டிராபிக் உள்ளதா ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தான் காட்டுவோம். தொழில்நுட்ப கோளரால் சில நேரங்களில் இப்படி நடந்து விடுகிறது என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.