கொரோனா தடுப்பூசி சோதனை சக்சஸ்.. இறுதி டிரையல் இம்மாதம் தொடக்கம்- அமெரிக்க மருந்து நிறுவனம் அறிவிப்பு
வாஷிங்டன்: மாடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்ட டிரையல் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
இந்த மருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே முதலில் கொரோனா தடுப்பூசி டிரையலை துவங்கியது மாடர்னா நிறுவனம்தான். முதல் கட்டமாக தடுப்பூசி சோதனை 45 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டது.
திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு
ஆன்டிபாடிகள்
இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களிடையே வைரஸைக் கொல்லும் ஆன்டிபாடிகள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. நியூ இங்கிலாந்து ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கோவிட் -19லிருந்து மீண்டு வரும் இந்த நோயாளிகளுக்கு சராசரியாக அதிகமான ஆன்டிபாடிகள் உள்ளன.
பக்கவிளைவு இல்லை
நல்ல விஷயம் என்னவென்றால், தன்னார்வலர்கள் யாரும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இருப்பினும், சில நாட்கள் சோர்வு, தலைவலி, குளிர், தசை வலி மற்றும் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ் எடுத்தவர்களில் இது பெரும்பாலும் காணப்பட்டது.
ஆனால், பல தடுப்பூசிகளுக்கு இது பொதுவான அறிகுறிதான் என்பதால், பயப்பட தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தடுப்பூசிதான் ஒரே தீர்வு
கொரோனா தொற்றுநோயை ஒழிக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல் நிறுவனம்
மார்ச் 16 அன்று கொரோனா தடுப்பூசியின் மனித டிரையலை தொடங்கிய முதல் நிறுவனம் மாடர்னா ஆகும். வைரஸின் மரபணு வரிசையை சீனா வெளயிட்ட 66 நாட்களுக்குப் பிறகு, மாடர்னா கொரோனா தடுப்பூசியைத் தயாரித்து பரிசோதிக்கத் தொடங்கியது. அமெரிக்க, தேசிய, ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி ஃபோஸி இதை ஒரு நல்ல செய்தி என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியில் பக்க விளைவு எதுவும் இல்லை, இது அதிக அளவு ஆன்டிபாடிகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது கட்ட ஆய்வு
இந்த அறிவிப்புக்குப் பிறகு மாடர்னாவின் பங்கு 15 சதவீதம் உயர்ந்தது. மாடர்னா தடுப்பூசி ஆய்வுக்கு, அமெரிக்க அரசு சுமார் 50 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. 2வது கட்ட மனித டிரையல் மே மாதம் துவங்கியுள்ள நிலையில், இந்த மாதம், 3வது கட்ட ஆய்வு துவங்க உள்ளது. ஜூலை மாதம் 30,000 பேருக்கு, தடுப்பூசி செலுத்தி நிறைவு கட்ட சோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று கட்ட ஆய்வுகளும் நல்ல முடிவை காட்டினால், இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.