2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள்.. மாடர்னா நம்பிக்கை
வாஷிங்டன்: அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதனிடையே மாடர்னா நிறுவன தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என ஆய்வு மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்க முடியும் என நம்பிக்கை இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்டீபேன் பான்செல் வெள்ளிக்கிழமை கூறுகையில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் விண்ணப்பித்துள்ளோம்.
எங்கள் நிறுவன தடுப்பு மருந்து 94.1 சதவீத செயல்திறனை கொண்டது என அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. கொரோனா தடுப்பு மருந்து 37 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும். அரசுக்கு 25 டாலராக கொடுக்கப்படும் என்றார்.