டீ காபி டீ காபி.. சமோஸ்ஸ்ஸ்ஸஸா... அமெரிக்க நாடாளுமன்றத்தில் குவியும் இந்தியர்கள்!
வாஷிங்டன்: "சமோசா குரூப்".. இப்படித்தான் தங்களை தாங்களே செல்லமாக அழைத்துக் கொள்கிறார்கள் இந்திய அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை வேட்பாளர்கள். வரப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறதாம்.
அமெரிக்க அரசியலில் முன்பை விட இப்போது அதிக அளவில் இந்திய அமெரிக்கர்கள் ஈடுபடுகின்றனர். உச்சகட்டமாக இந்த முறை அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு இந்தியவம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் துணை அதிபராவது உறுதி என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வரப் போகும் புதிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் இந்திய அமெரிக்கர்கள் இடம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்!
அதிபர் தேர்தல்
நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கூடவே செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதிய நாடாளுமன்றமும் இதன் மூலம் அமையவுள்ளது. இந்த நிலையில் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான இந்திய அமெரிக்கர்கள் தேர்தலில் களம் கண்டுள்ளனர். அனைவருமே வெற்றி பெறுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சமோசா குரூப்
இந்திய அமெரிக்க வேட்பாளர்கள் தங்களை "சமோசா காக்கஸ்" என்று செல்லமாக அழைத்துக் கொள்கின்றனர். இந்த வார்த்தையை உருவாக்கியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்திதான். இப்படித்தான் இப்போது தங்களை இந்தியர்கள் அழைத்துக் கொள்கின்றனர். இந்திய அமெரிக்கர்கள் பலரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முக்கியமான ஐவர்
அவர்களில் முக்கிமயான ஐந்து பேர் உள்ளனர். இதில் நான்கு பேர் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் செனட் சபையைச் சேர்ந்தவர். அவர் வேறு யாருமல்ல கமலா ஹாரிஸ்தான். 4 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் மூத்தவர் டாக்டர் அமி பேரா ஆவார். இன்னொருவர் ரோ கண்ணா. அடுத்து கிருஷ்ணமூர்த்தி. நான்காவது உறுப்பினர் பிரமீளா ஜெயபால். இவர்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்திய அமெரிக்க பெண் எம்பி ஆவார். இவர்கள் அனைவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மேலும் பலர்
இவர்கள் தவிர அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் டாக்டர் ஹிரால் திபிரினேனி என்ற இன்னொரு இந்திய வம்சாவளி உறுப்பினரும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அப்படி வெற்றி பெற்றால் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6 ஆக உயரும். இதுதவிர டெக்சாஸ் மாகாணத்தில் பிரதிநிதிகள் சபை தேர்தலில் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெற்றால், டெக்சாஸ் மாகாணத்திலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
மைன் செனட் உறுப்பினர்
மைன் செனட் உறுப்பினர் பதவிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் சாரா கிடியன். இவரது தந்தை இந்தியர், தாயார் ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் இவரே வெல்வார் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் சூசன் காலின்ஸை வீழ்த்தி வெற்றி பெறுவார் என்று நம்பப்படுகிறது.
புதிய சரித்திரம்
இவர்கள் தவிர மேலும் சில இந்திய அமெரிக்கர்களும் போட்டியில் உள்ளனர். ஆனால் அவர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது. ஒரு வேளை அவர்களில் யாரேனும் வென்றால், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை புதிய சரித்திரம் படைக்கும். ஆக மொத்தம் இந்த தேர்தலில் இந்திய அமெரிக்கர்களின் பங்கு அமெரிக்க அரசியலில் மட்டுமல்லாமல், அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் முக்கியத்துவம் பெறப் போவது உறுதியாகி விட்டது.