பைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா
வாஷிங்டன்: ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சுமார் 200 தேசியப் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், டிரம்பை தோற்கடித்தார். இருப்பினும், தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிய டிரம்ப், தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், டிரம்ப் இந்தத் தேர்தலில் முடிவுகளை மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். நீதிமன்றங்கள் வழக்கு தொடுப்பது முதல் தேர்தல் அலுவலர்களுக்கு அழுத்தம் தருவது வரை, அவர் எடுத்த எந்த முடிவும் பலன் தரவில்லை.
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஜோ பைடன் பதவியேற்பு விழா
இதையடுத்து, ஜோ பைடன் பதவியேற்பு விழாவிலும் மீண்டும் இதேபோல வன்முறை நடைபெறலாம் என்ற அச்சம் நிலவியது. இதன் காரணமாகத் தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 21ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட சுமார் 25 ஆயிரம் தேசியப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
தேசியப் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா
கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பு விழா எவ்வித வன்முறையுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சுமார் 150 முதல் 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தேசியப் பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியாக எத்தனை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம்
இருப்பினும், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் முன் வீரர்களுக்கு முறையான வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றாலும்கூட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 25 ஆயிரம் வீரர்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றும் தேசியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சொந்த ஊர் திரும்பும் வீரர்கள்
ஜோ பைடன் பதவியேற்பு விழா அமைதியாக நடந்து முடிந்தது. இதையடுத்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்கள், தற்போது சொந்த மாகாணங்களுக்குத் திரும்பி வருகின்றனர். அடுத்த 10 நாட்களில் சுமார் 15 ஆயிரம் வீரர்கள் சொந்த மாகாணங்களுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாத தொடக்கத்தில் மேலும் ஏழாயிரம் வீரர்கள் சொந்த மாகாணங்களுக்குத் திரும்ப உள்ளனர். மீதமிருக்கும் வீரர்கள் சில மாதங்கள் வரை பாதுகாப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.