பிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை!
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற செய்தி இதழான 'டைம்' இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக விமர்சனம் செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. 'பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் அட்டைப்பட கட்டுரையாக இந்த செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான 'டைம்' நாளிதழுக்கு உலகமெங்கும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். டைம் இதழில் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தாங்கள் இடம் பிடித்து விட மாட்டோமா என்று பல்வேறு தலைவர்களும் ஏங்குவது வழக்கம்.
2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறப்பு நேர்காணல் நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது டைம் இதழ். அப்போது அவரது பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக அதிக விஷயங்கள் அந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டு இருந்தன.
பிளவுவாதிகளின் தலைவர்
2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு, மிகப்பெரும் சக்தியாக அவர் உருவாகிக் கொண்டு இருப்பதை உலகிற்கு காண்பித்தது, டைம் இதழ். தற்போது லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டைம் இதழில் வெளியாகியுள்ள இந்த கட்டுரை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், குறிப்பிட்டுள்ள அம்சங்களை இனி பாருங்கள்.
ஜனரஞ்சக அரசியல்
உலகின் முக்கியமான ஜனநாயக நாடுகள் ஜனரஞ்சக தலைமையை நோக்கி தஞ்சமடைய தொடங்கிவிட்டன. இதற்கு உதாரணமாக, பிரேசில், பிரிட்டன், துருக்கி, அமெரிக்கா ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால், இது ஆரம்பித்தது இந்தியாவில்தான். நரேந்திர மோடியைப் பிரதமராக்கியதன் மூலமாக மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனரஞ்சக அரசியலுக்கு விதை போட்டது.
அடிப்படை கட்டமைப்புகள்
இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கட்டமைப்புகளான, மாநில சுயாட்சி, அதன் நிறுவன தலைவர்கள், சிறுபான்மையினரின் நிறுவனங்கள் மற்றும் இடங்கள், பல்கலைக்கழகங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, மீடியா போன்றவை நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சாதாரண அரசியல்வாதி
2014 ஆம் ஆண்டு, லோக்சபா, தேர்தலின் போது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்தார். ஆனால் அவரது மாயாஜாலம் பலிக்கவில்லை. மதம் சார்ந்த தேசியவாதத்தை இந்தியாவில் மோடி அரசு உருவாக்கி விட்டது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும், மக்களால் பார்க்கப்படுகிறார்.
எதிர்க்கட்சிகளின் பலவீனம்
இவ்வாறு கூறியுள்ள டைம் இதழ், எதிர்க்கட்சியும் விமர்சிக்கத் தயங்கவில்லை. இந்திய எதிர்க்கட்சிகள் வலுவிழந்து இருப்பது மோடி அரசுக்கு சாதகம். காங்கிரஸ் தலைமையில் பல்வேறுபட்ட கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணி அமைத்து உள்ளன. அவற்றுக்கு மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதை தவிர்த்து வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு டைம் இதழ் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளது.