பூமியை மிரட்டும் ‘பென்னு’வை நெருங்கியது ஓசிரிஸ்-ரெக்ஸ்.. விரைவில் மண்ணை அள்ளிக் கொண்டு திரும்பும்!
ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், விண்கல் பென்னுவை நெருங்கியுள்ளது.
Recommended Video
வாஷிங்டன்: நாசாவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் சுமார் 2 கோடி மைல்கள் பயணம் செய்து, பென்னு விண்கல்லை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது.
சூரியனை ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஆனால், சில எரிகற்கள் பூமியில் வந்து விழுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
அப்படியாக தற்போது 73 விண்கற்கள் சூரியனை சுற்றி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டுபிடித்துள்ளது. அவற்றில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
பென்னு விண்கல்:
அத்தகைய விண்கல்லில் ஒன்று தான் பென்னு. மிகப் பெரிய விண்கல்லான பென்னு, சுமார் 500 மீட்டர் நீளமும், 200 மீட்டர் குறுக்களவும் கொண்டது. அது மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது. இன்னும் 200 ஆண்டுகள் கழித்து அது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படி அது தாக்கினால் பூமி கடும் பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும்.
நாசா திட்டம்:
எனவே, கடந்த 1999-ம் ஆண்டு முதல் பென்னுவின் செயல்பாடுகளை நாசா கண்காணித்து வருகிறது. அதை எப்படியும் விண்ணிலேயே அடித்து உடைத்து நொறுக்கிவிட வேண்டும் எனவும் நாசா திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த விண்கல்லைப் பற்றி ஆராய்வதன் மூலம் பூமியின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும் எனவும் அது நம்புகிறது.
ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்:
இதற்காக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, ஓசிரிஸ்-ரெக்ஸ்(OSIRIS-REx) என்ற விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. இது புவிக்கு அருகில் இருக்கும் விண்கற்கள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. இது பென்னு விண்கல்லைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
பென்னுவை நெருங்கியது:
இந்நிலையில் தற்போது இந்த ஓசிரிஸ்-ரெக்ஸ், இரண்டு ஆண்டு காலம் பயணம் செய்து, சுமார் 2 கோடி மைல்கள் தொலைவில் உள்ள பென்னு விண்கல்லை நெருங்கியுள்ளது. கடந்த திங்களன்று நடந்த இந்த நிகழ்வின் போது அதன் உந்து விசை இயக்கப்பட்டது. இதனால், பென்னுவிடம் இருந்து குறைந்தபட்சம் 7 கிமீ தொலைவில் அதன் திசைவேகத்துடன் ஓசிரிஸ் -ரெக்ஸ் ஒத்திசைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளது.
மண் சேகரிப்பு:
இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் அங்கேயே அது ஆய்வுகள் மேற்கொள்ளும். பின்னர் 2020ம் ஆண்டின் மையப்பகுதியில் மீண்டும் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும். பென்னுவில் இருந்து 60 கிராம் முதல் 2 கிலோ வரையில் கல்லும் மண்ணும் சேக்ரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குழல் ஆராய்ச்சிக்காக 2023-ம் ஆண்டு புவிக்கு வந்து சேரும்.
அற்புதமான சாதனை:
பென்னுவை இந்த ஆய்வு வாகனம் நெருங்கிய தருணத்தில், அதன் துணை முதன்மை ஆய்வாளரான ஹீத்தர் இனோஸ், கொலராடோ மாகாணத்தின் லிட்டில்டன் என்ற இடத்தில் உள்ள இந்த ஆய்வு வாகனத்தை தயாரித்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தார். அப்போது அவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, "இப்படி ஓர் அற்புதமான சாதனையை எங்கள் அணி சாதிப்பதைப் பார்ப்பது தனிப்பட்ட முறையில் பலவகையில் மகிழ்ச்சியைத் தருகிறது. அவற்றை என்னால் விவரிக்கக்கூட முடியாது" எனத் தெரிவித்தார்.
மற்றுமொரு சாதனையாகும்:
இன்னும் சில நாட்களில் ஓசிரிஸ்-ரெக்ஸ் பென்னுவுக்கு அருகில் இன்னும் நெருங்கிச் சென்று முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் மூலம் பென்னுவின் நிறை, ஈர்ப்பு ஆகியவற்றை ஆய்வு வாகனம் மதிப்பிடும். இந்த மதிப்பீடுகள் பிறகு இந்த ஆய்வு வாகனம் விண்கல்லை சுற்றி வருவதற்கான திட்டத்தை வகுக்கப் பயன்படும். அப்போது விண்வெளி ஆய்வு வாகனங்கள் இதுவரை சுற்றிவருவதிலேயே மிகச் சிறிய பொருளாக பென்னு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்கைகள்:
சூரியன், பூமி உட்பட கிரகங்கள் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவே யூக அடிப்படையில் பல கொள்கைகள் உள்ளன. கிரகங்கள் தோன்றிய போதே விண்கல்களும் தோன்றி விட்டன. ஆனால், அவை தோன்றிய காலத்திலிருந்து பாதிப்பு இல்லாமல் கிட்டத்தட்ட அதே மாதிரியில் உள்ளதாகக் கருதப்படுகிறது.
விடை கிடைக்கும்:
இத்துடன் ஒப்பிட்டால் பூமியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எனவே, விண்கல்லில் இருந்து கல்லையும், மண்ணையும் எடுத்து வந்து சோதித்தால் பூமியின் தோற்றம், உயிரினத் தோற்றம் ஆகியவை பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதற்காகவே தொடர்ந்து விண்கற்கள் பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.