மீண்டும் வன்முறை ஏற்படுத்துவதை தடுக்க.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் படைகள் குவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் மீண்டும் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தேசியப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் இரண்டு காவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இதற்குப் பொறுப்பேற்று அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், துணை அதிபர் மைக் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி, டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானமும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மைக் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த மறுத்துவிட்டார்.
இதையடுத்து டிரம்ப் மீது, பதவி நீக்க தீர்மானத்தை ஜனநாயகக் கட்சி எம்பிகள் முன்மொழிந்துள்ளனர். இது குறித்து விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம்..ஜிம் மெகாகவர்ன் எம்பி பேச்சு
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி நடைபெற்றதைப் போல மீண்டும் நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தேசியப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகம் அருகே தேசியப் பாதுகாப்புப் படைகள் ஓய்வு எடுத்துவருவது போன்ற புகைப்படங்களும் டிரெண்டாகி வருகிறது. மேலும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போரின் போது நாடாளுமன்ற கட்டடத்திலேயே அந்நாட்டு எம்பிகள் தங்கினர். அது தொடர்பான புகைப்படங்களையும் தற்போது பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டும் டிவிட்டரில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.