டிரம்ப் போட்ட ஆயுத ஒப்பந்தம்.. இதுவா முக்கியம் நமக்கு.. அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு குரல்
வாஷிங்டன்: டிரம்ப் போட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் பிரதான அதிபர் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதற்கு பதிலாக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைழுத்திட்டுள்ளார். இதன்படி 21 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்தியா அமெரிக்காவிடம் நவீன ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
MH-60 ரோமியோ மற்றும் MH-60 ரோமியோ Seahawk ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. கடற்படைக்கு இந்த ஹெலிகாப்டர்கள் அதிக பலனை தரக்கூடியவை ஆகும்.
அதிபர் வேட்பாளர்
இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் தான் டிரம்ப். அவர் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பிரதான அதிபர் வேட்பாளராக அமெரிக்காவின செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் போட்டியிட உள்ளார். இவருக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது,.
பருவ நிலை ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதற்கு பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், "Raytheon, போயிங் மற்றும் லாக்ஹீட் போன்ற 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், நல்ல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வேலைகளை உருவாக்கவும், நமது பூமியை காப்பாற்றவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட ஒப்பந்தம் போட்டியிடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
டிரம்ப் அறிவிப்பு
அகமதாபாத்தில் அண்மையில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், கடற்படை ஹெலிகாப்டர்கள் உட்பட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களை அறிவித்தார். அதன்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்யாவுக்கு பதில்
ஆசியாவில் சீனாவின் வலுவான பொருளாதார மற்றும் இராணுவத்துக்கு போட்டியாக வர முயற்சிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்த விரும்பவே டிரம்பின் இந்திய பயணம் உதவும் என்று கருதப்படுகிறது. டிரம்பின் வருகையின் மூலம் இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக வழக்கமாக வாங்கும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதற்கு பதிலாக அமெரிக்கா பக்கம் திரும்பி உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.