"மூச்சு விட முடியவில்லை" கதறிய ஜார்ஜ்.. உலகை உலுக்கிய கறுப்பின இளைஞனின் மரணம்.. நியூஸ்மேக்கர் 2020
இந்த வருடம் உலகையே உலுக்கி போட்டது ஜார்ஜ் பிளாயிட் மரணம்
வாஷிங்டன்: ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின இளைஞனை கொலை செய்த சம்பவம், உலக அளவில் பெரும்
புரட்சியையே புரட்டி போட்டது.. பல மாற்றங்களுக்கும், எழுச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் அடித்தளமிட்ட ஜார்ஜ்தான் இந்த வருட நியூஸ்மேக்கராக விளங்குகிறார்.
மின்னபொலிஸ் நகரில், மே 25-ம் தேதி நடந்த சம்பவம் இது:
ஒரு பெட்டிக்கடைக்கு ஜார்ஜ் என்ற கருப்பின இளைஞர் சென்றார்.. அங்கு சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டுகிறார்.
உடனே கடைக்காரரோ, அந்த நோட்டை பார்த்ததும் போலி டாலர் என தவறுதலாக நினைத்துகொண்டு, போலீசுக்கு போன் செய்கிறார்.. 4 போலீசாரும் அடுத்த செகண்டே அங்கு வந்து ஜார்ஜை விசாரிக்கிறார்கள்.
விசாரணை
விசாரணையின்போது ஆவேசமடைந்த ஒரு உயர் போலீஸ்காரர் டெரண் ஜோவின் என்பவர் ஜார்ஜ் கழுத்தை பிடித்து, தன் முட்டியில் வைத்து அமுக்குகிறார்.. கழுத்து நெரிபடுகிறது.. "மூச்சு விடமுடியவில்லை" என்று ஜார்ஜ் கதறுகிறார்.. ஆனாலும் அந்த போலீஸ் அதிகாரி விடாமல் முட்டியை சிறிதும் நகர்த்தாமல், அழுத்தத்தை மட்டும் மேலும் மேலும் தந்து கொண்டே இருக்கிறார்.. இதை உடன் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்களும் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
வீடியோ
மூச்சு திணறி திணறியே ஜார்ஜ் உயிர் பிரிகிறது... இதுதான் அந்த சம்பவம். இது வீடியோவாக வெளிவந்து உலகையே புரட்டி போடும் சக்தியாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இறுதியில் உள்நாட்டு போர் வரை கொண்டு வந்துவிட்டுவிட்டது அந்த சம்பவம்.. அடுத்த முறை நான்தான் அதிபர் என்று இறுமாப்புடன் சொல்லி கொண்டிருந்த டிரம்புக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்துவிட்டது. மார்ட்டின் லூதர் கிங்குக்கு பிறகு இப்படி ஒரு போராட்டம் ஜார்ஜ் மரணத்தை முன்னெடுத்துதான் வல்லரசு நாட்டில் நடந்தது.. லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்..
ஆர்ப்பாட்டம்
இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... போராட்டக்கார்களை பார்த்து டிரம்ப் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார்.. மிரட்டல் விடுத்தார்.. ராணுவத்தை கொண்டு அடக்க போகிறேன் என்று வார்னிங் தந்தார்.. போராடுபவர்களை நாய்கள் என்று திட்டினார்.. இருந்தாலும் தன் சொந்த நாட்டில் ஒருத்தரைகூட டிரம்பால் அடக்க முடியவில்லை என்பதுதான் உச்சக்கட்ட அவமானம். போதாக்குறைக்கு இவரது 2வது மனைவி, மகளும் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது டிரம்ப்பே எதிர்பாராத ஒன்று.
நிறவெறி
ஆரம்பத்தில், ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் இந்த போராட்டம் ஆரம்பமானது.. ஆனால் நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட்டமாக அது மாறியது... அதுவும் உலகளாவிய அளவில் உருமாறிவிட்டது.. இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்தது.. லண்டனில் முன்னாள் பிரதமரின் வின்ஸ்ட்டன்ட் சர்ச்சிலின் நினைவு சின்னம் மீது "இனவெறி" என்று போராட்டக்காரர்கள் கொந்தளித்து எழுதினர்.. அங்கிருக்கும் மகாத்மா காந்தி சிலை, ஆபிரகாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான வாசகங்களை எழுதினர்.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் எட்வர்ட் கோஸ்ட்டனின் சிலையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.. கோஸ்ட்டன் என்பவர் அங்கு முன்னாள் எம்பியாக இருந்தவர்.. அடிமைகளை விற்றே பணம் சம்பாதித்து பெரும் கோடீஸ்வரர்... அவர் சிலையைதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து துவம்சம் செய்தனர்.. அதோடு விடவில்லை, அந்த சிலையை தரதரவென இழுத்து கொண்டு போய் கடலில் வீசியெறிந்தனர்.
அதிர்வலை
125 ஆண்டு காலமாக இருந்த சிலை துவம்சம் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. ஆஸ்திரேலியாவில் கொந்தளித்தனர் மக்கள்.. ஐரோப்பியாவின் பெல்ஜியத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நகரவில்லை.. பிரேசிலில் நடந்த போராட்ட முழக்கங்கள் விண்ணை முட்டியது.. உலகம் முழுவதும் திரண்டு போராட்டம் நடத்தியவர்களை எல்லாம் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு போலீசார் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்.
சரித்திர நிகழ்வு
ஆனால் யாரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் ஆவேசத்தை குறைக்க முடியவில்லை.. ஜார்ஜ் என்ற கருப்பின அப்பாவி அநியாயமாக கொல்லப்பட்டதன் விளைவு, ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் மக்கள் திரண்டுள்ளது சரித்திர நிகழ்வாக பார்க்கப்பட்டது இந்த வருடம் மறக்க முடியாது சம்பவமாகும்!