லாக்டவுனுக்கு முன்.. லாக்டவுனுக்கு பின்.. எப்படியிருந்தது சீனா?.. நாசா வெளியிட்ட செயற்கைகோள் படங்கள்
வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தையடுத்து சீனாவில் முழு அடைப்புக்கு முன்பும் பின்பும் எப்படியிருந்தது என்பது குறித்து நாசா தனது செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்த படங்களை நாசாவின் காட்டார்டு ஸ்பேஸ் ஃபைட் சென்டரும் யூனிவர்சிட்டீஸ் ஸ்பேஸ் ரிசர்ச் அசோசியேஷன் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சீனாவில் கொரோனாவால் 3000 -க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து அங்கு ஹூபெய் மாகாணம் முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டது.
ஜனவரி 2020 தேதி இறுதி வாரத்திலிருந்து சீனாவில் விமானம், சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இரவு நேரத்தில் வுகான் நகரம் எப்படியிருந்தது என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
சீனாவின் வுகான் நகரையொட்டி உள்ள இடங்கள் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை இரவு நேரத்தில் எப்படியிருந்தது என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஜி, எஸ் என குறிப்பிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலைகளை குறிக்கும்.
60 மில்லியன் மக்கள் வாழும் இந்த மாகாணத்தில் போக்குவரத்து, தொழில் சார்ந்த நடவடிக்கைகள் எப்படியிருந்தது என்பதை இந்த படங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. செயற்கைகோள் படங்களில் ஜனவரி மாதத்தில் ஜியான்கான் மாவட்டம் எப்படி விளக்குகள் வெளிச்சத்துடன் இருக்கிறது என்பதையும் அதே பகுதி பிப்ரவரி மாதத்தில் எப்படி இருட்டாக இருக்கிறது என்பதையும் காணலாம்.
இந்த மாவட்டம் வுகான் நகரின் மிகப் பெரிய வணிகவளாக பகுதியாகும். இதன் அருகே குடியிருப்புகளும் உள்ளன. இந்த புகைப்படங்கள் சாலைகள் எங்கே இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த சாலைகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கூறுகிறது. அது போல் மனித நடமாட்டமும் எப்படி இருந்தது என்பதன் ஒட்டுமொத்த பிரதிபலிப்புதான் இந்த புகைப்படங்கள்.
இந்த புகைப்படங்கள் அகச்சிவப்பு இமேஜிங் ரேடியோமீட்டர் சூட் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இது NOAA-NASA Suomi NPP செயற்கைகோளில் உள்ள ஒரு அகச்சிவப்பு இமேஜிங் கருவியாகும். இது வெளியிடும் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் எங்கே வெளிச்சம் இருக்கிறது, எங்கே வெளிச்சம் இல்லை என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஒளி இருக்கும் இடம், ஒளி இல்லாத இடம் உள்ளிட்டவற்றை இந்த இமேஜிங் கருவி வேறுப்படுத்தி காண்பிக்கும். அப்படித்தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. பிளாக் மார்பிள் இமேஜிங் குழுவினர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.