'எங்கள் பொருளாதார நடவடிக்கை சூப்பரானது.. அமெரிக்காவே பாராட்டியுள்ளது..' நிர்மலா சீதாராமன் பெருமிதம்
வாஷிங்டன்: இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு செய்த பல்வேறு சீர்திருத்தங்களை பைடன் தலைமையிலான அரசு பாராட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பைடன் அரசு பாராட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்பாயின்ட்மென்ட் கேட்ட பிடிஆர்.. உடனே வழங்கிய நிர்மலா சீதாராமன்.. சந்திப்பில் பேசியது என்ன?
அமெரிக்கா பாராட்டு
இது தொடர்பாக அவர் கூறுகையில், , "முன் தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை(retrospective tax) ரத்து செய்தது உள்ளிட்ட இந்திய அரசின் பல சீர்திருத்தங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளது. அதேபோல கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களும் கூட இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இது சற்று காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் கூட இதைத் துணிச்சலான முடிவு என்றே கார்ப்பரேட் முதலாளிகள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலையில் இருந்ததாலேயே இதில் முடிவெடுக்கக் காலதாமதம் ஆனது.
இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தம்
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஒரு முடிவு கிடைத்தவுடன் இந்த வரி முறையை ரத்து செய்தோம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்று, பாராட்டினர்" என்றார். மேலும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேசிய அவர், "இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது சற்று பெரிய பிரச்சினை. இது தொடர்பாக இந்திய வர்த்தகத்து அமைச்சகமும் அமெரிக்க வர்த்தகத்து அமைச்சகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் டிசம்பர் மாத்திற்குள் இதில் முடிவு எடுக்கப்படும்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான ஒரு தலைவர் ஆவர். இதற்கு முன் வர்த்தக மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதும் இந்தியா -அமெரிக்கா உறவில் நிர்மலா சீதாராமன் பெரும் பங்காற்றியிருந்தார். கொரோனா பரவலுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதைத் தவிரவும் 25க்கும் மேற்பட்ட கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.
முக்கிய ஆலோசனை
முன்னதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் உடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் கொரோனா பாதிப்பில் இருந்து மேக்ரோ பொருளாதாரத்தை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, சர்வதேச அளவில் பொருளாதார ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு நிதி, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.