பத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி
வாஷிங்டன்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி சவுதி துணை தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்த நாட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானை நோக்கி யாருமே கை காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி. இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் பற்றி விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த நிலையில், ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ட்ரம்ப் சந்தித்து பேசியிருந்தனர். இதுதொடர்பாக இன்று டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"பத்திரிக்கையாளர் கொலை சம்பவத்தால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் நேரடியாக சவுதி அரேபியாவின் இளவரசரை நோக்கி விரலை காட்டவில்லை. அவர்கள் (சவுதி) இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறார்கள்". இவ்வாறு, ட்ரம்ப் தெரிவித்தார்.