பெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா
வாஷிங்டன்: அமெரிக்காவின் தாக்குலுக்கு பயந்து வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் ஒளித்து வைத்திருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியாட்நாமில் சந்தித்து பேச உள்ளார். இந்த நேரத்தில் வடகொரியாவுக்கு சிக்கல் தரும் வகையில் ஐ.நா. நிபுணர்
குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் திட்டத்தைத் தடுப்பதற்காக அந்நாட்டுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் எந்த பலனும் இல்லை.
தடையை மீறி நிலக்கரி விற்பனை
பொருளாதாரத் தடைகளை மீறி சட்டவிரோதமாக வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருள்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், தடையை மீறி வட கொரியா தனது நிலக்கரியை, பிற நாடுகளுக்கு விற்று வருமானம் பார்த்து வருகிறது.
விமான நிலைய ரகசியம்
இதனால், அந்த நாட்டில் அணு ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டம் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. ஏவுகணைகளை ரகசியமாகத் தயாரிக்கவும், சோதிக்கவும் விமான நிலையம் போன்ற பொது இடங்களை வட கொரியா பயன்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கு பயந்த வடகொரியா
ஏவுகணைத் தயாரிப்பதை தடுப்பதுக்காக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதை தடுக்கும் வகையில், தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் வட கொரியா பதுக்கி வைத்துள்ளது. சட்டவிரோதமாக எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், நிலக்கரி ஏற்றுமதி செய்வதற்கும் வடகொரியா தனது விமான நிலையங்களை பயன்படுத்துகிறது என ஐ.நா. நிபுணர் குழுவினர்
குற்றம்சாட்டியுள்ளனர்.
உளவுத்துறை சொன்னது உண்மை
ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறை வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடவில்லை என கூறியிருந்த நிலையில் இப்போது ஐ.நா. நிபுணர் குழுவும் அதே கருத்தைத் சொல்லியிருப்பதால் வடகொரியாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.