சீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நோவாவக்ஸ் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 90% வரை பலனளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோவாவக்ஸ் வேக்சின் உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இன்னும் எந்த நாட்டிலும் முழுவதுமாக முடியவில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் என்பது அனைத்து ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
தற்போது சில தடுப்பூசிகள் புழக்கத்தில் இருந்தாலும்கூட, புதிய தடுப்பூசிகள் குறித்த ஆய்வுப் பணிகளும் ஒரே புறம் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
நோவாக்ஸ் தடுப்பாற்றல்
ஏற்கனவே அமெரிக்காவின் பைசர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளை பல்வேறு உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக நோவாவக்ஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்து சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நோவாவக்ஸ் வேக்சின் கொரோனா வைரசுக்கு எதிராக 90.4% வரை தடுப்பாற்றல் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாகத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நோவாவக்ஸ் வேக்சின் 100% தடுக்கிறது.
உயிரிழப்பை 100% தடுக்கும்
அதாவது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிலவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அது லேசான பாதிப்பாகவே இருந்தது. சுருங்கச் சொன்னால், இந்த தடுப்பூசி உயிரிழப்புகளை 100% வரை தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த நோவாவக்ஸ் வேக்சின் சோதனை நடத்தப்பட்டன. மொத்தம் 119 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 29,960 பேர் பங்கேற்றனர். 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இதன் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீரம் நிறுவனம்
ஒப்புதலுக்குப் பிறகு, இந்தாண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் மாதத்திற்கு 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் அது 15 கோடியாக உயர்த்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமையை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. சீரம் ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சாதாரண பிரிட்ஜில் சேமிக்கலாம்
உலகின் வளர்ந்த நாடுகள் தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான தடுப்பூசிகளை ஒட்டுமொத்தமாக ஆர்டர் செய்துவிட்டதால், வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு நோவாவக்ஸ் தடுப்பூசி சிறந்த ஒரு சாய்ஸாக இருக்கும். பைசர், மாடர்னா போல இந்தத் தடுப்பூசி மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கத் தேவையில்லை. இதனை 2°- 8°C வெப்ப நிலையில் சேமித்தால் போதும். அதாவது சாதாரண பிரிட்ஜில் கூட நோவாவக்ஸ் தடுப்பூசி சேமிக்கலாம்.
தடுப்பூசி ஏற்றத்தாழ்வு
சர்வதேச அளவில் தற்போது கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியதில் மிகப் பெரிய ஒரு ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. உலகில் டாப் பணக்கார நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் 73% பேருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர். ஆனால், ஏழை நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் வெறும் 1% பேருக்கு மட்டுமே தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர். புதிய தடுப்பூசிகள் இந்த ஏற்றத்தாழ்வை களைய உதவும்.