அமெரிக்க கலவரம்... அலேக்காக 150 பேரை தூக்கிய எஃபிஐ... மேலும் 400 பேருக்கு ஸ்கெட்ச்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக இதுவரை 150 பேர் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் 400 பேர் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், டிரம்ப் தோற்கடித்தார். கடந்த 26ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடும் அதிபர் ஒருவர் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும்.
இருப்பினும், இத்தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தனக்குக் கிடைத்த வாக்குகள் பைடனுக்கு மாற்றப்பட்டதாகவும் டிரம்ப் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இருப்பினும், டிரம்பால் கடைசி வரை தேர்தல் முடிவுகளை மாற்ற முடியவில்லை.
நாடாளுமன்ற கலவரம்
அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 6ஆம் தேதி முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றம் ஒன்றுகூடியது. தேர்தலில் பைடன்-கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
150 பேர் மீது வழக்குப்பதிவு
இது அமெரிக்க ஜனநாயகத்தில் கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பான விசாரணையை எஃப்.பிஐ தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தக் கலவரத்தின்போது பல்வேறு புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதன் அடிப்படையில் எஃப்பிஐ நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை சுமார் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 400 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
20 ஆண்டுகள் வரை சிறை
முதலில் இவர்கள் மீது நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்தது, முறைகேடாக நடந்துகொண்டது உள்ளிட்ட சிறு வழக்குள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. தற்போது இவர்களில் பலர் மீது கடுமையான பிரிவுகளிலும் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். போலீசாரை தாக்கியது, அரசு நடவடிக்கைகளில் தலையிட்டது போன்ற பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
உள்நாட்டுப் பயங்கரவாதிகள்
உள்நாட்டுப் பயங்கரவாதிகள் குழு பலவும் இதில் ஈடுபட்டனர் என்றும் இதன் காரணமாக அரசு இதை மிகவும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் துப்பு கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "எஃப்பிஐ விசாரணை செய்ததிலேயே இந்த வழக்கு மிகப் பெரியது, விசாரணை செய்யச் செய்ய, இன்னும் பெரிதாகிக் கொண்டே செல்கிறது" என்றார்.
பைப் வெடிகுண்டுகள்
ஜனவரி 6ஆம் தேதி கலவரத்தின்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அருகே இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை வெடிப்பதற்கு முன்பே, கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த குண்டை வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் எஃப்.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 75,000 டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும் எஃப்.பி.ஐ. அறிவித்துள்ளது.