இந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக, எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புகள் அழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தீவிரவாதிகள் இனி இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.