பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பென்சில்வேனியா மாகாண வாக்குகளை எண்ணும் மையத்துக்குள் அனைத்து கண்காணிப்பாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் தங்கி உள்ளார். தோல்வி அடையும் நிலையில் உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக கூறி பல வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
பெரும்பாலான வழக்குகள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிராகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிக முக்கியமான பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கையும் சர்ச்சைக்குள்ளானது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் தங்களது பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை என டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அம்மாகாண கீழ்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் குடியரசு கட்சி- ஜனநாயக கட்சி இரண்டினது பார்வையாளர்களுமே அனுமதிக்கப்படவில்லை என கூறி டிரம்ப் ஆதரவாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் முறையிட்டனர். இதனையடுத்து அனைத்து தரப்பினரையும் உரிய இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றங்களிலும் பின்னடைவை சந்தித்து வரும் டிரம்ப் தரப்புக்கு இது ஆறுதலான விஷயமாகும்.