பயப்படாதீங்க, பாதுகாப்பானது தான்... ஃபைசர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு
வாஷிங்டன்: நார்வே நாட்டில் முதியவர்கள் உயிரிழந்ததற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளன.
அதன்படி நார்வே நாட்டிலும் ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அந்த நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நார்வே உயிரிழப்பு
இந்நிலையில், அங்கு ஃபைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 29 முதியவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அவர்களில் 13 பேரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அந்நாட்டின் சுகாதாரத் துறையினர், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஏற்படும் சாதாரண பக்க விளைவுகளைக்கூட அவர்களின் உடல்களால் தாங்க முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை
இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதியவர்களுக்குத் தடுப்பூசி அளிக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன. இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட தடுப்பூசி குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் உயிரிழந்தவர்களின் தகவல்களை ஆய்வு செய்தோம். இது எதிர்பார்த்த ஒன்றே. பலவீனமாக உள்ளவர்கள் மற்றும் முதியவர்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உயிரிழப்பு அபாயகரமானதாக இல்லை.
முதியவர்களுக்கும் வழங்கலாம்
மேலும், முதியவர்களின் உயிரிழப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் இதுவரை எவ்வித தொடர்பும் கண்டறியப்படவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, பக்க விளைவுகளால் குறைவான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது. எனவே, முதியவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, முதியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நார்வே விளக்கம்
உயிரிழப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நார்வே நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள அந்நாட்டு அரசு, தடுப்பூசி எடுத்துக்கொள்வதை விட கொரோனாவே அதிக ஆபத்தானது என்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.