அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்கு துப்பாக்கி, குண்டுகளோடு வந்த கலவரக்காரர்கள்.. விசாரணையில் அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு லாரி நிறைய, ஆயுதங்களோடு, வன்முறையாளர்கள் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அலபாமாவைச் சேர்ந்த நபர் புதன்கிழமை அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில், 11 நாட்டு வெடிகுண்டுகள், அசால்ட் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பிளாக் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு நபர் அசால்ட் துப்பாக்கியை, கேபிட்டல் கட்டிடத்தை நோக்கி காட்டியதாகவும், சுடுவேன் அல்லது, சபாநாயகர் நான்சி மீது தாக்குதல் நடத்துவேன் என்று அவர் கூறியதாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட சில தனி நபர்கள் கூட தங்களிடம் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த எம்.பி மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரது மேசையில் அமர்ந்த ஒரு நபர் உட்பட 13 பேர் மீது நீதித்துறை அடையாளம் கண்டு குற்றம்சாட்டியுள்ளது.
யார் அதிபரானா என்ன... எங்களுக்கு மெயின் வில்லன் அமெரிக்காதான்... விளாசும் வட கொரிய அதிபர்
கிளீவ்லேண்ட் க்ரோவர் மெரிடித் ஜூனியர் என்ற நபரை மத்திய விசாரணை அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாக குற்றம்சாட்டியுள்ளது. அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஆர்கன்சாஸின் ரிச்சர்ட் பார்னெட் என்பவரும் கலவரத்தின் போது, சபாநாயகர் நான்சி பெலோசியின் மேஜையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரை அடையாளம் கண்டு, லிட்டில் ராக் நகரில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைதுகள் ஒரு பக்கம் என்றால், நாடாளுமன்ற தாக்குதலை போலீஸ் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காவல்துறை மீது திரும்பியுள்ளது. இதையடுத்துதான்
அமெரிக்க கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கேபிடல் போலீஸ் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளை, மெட்டல் குழாய்கள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்டு "தீவிரமாக தாக்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார். பெரும் சேதத்தை ஏற்படுத்தி கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைய வன்முறையாளர்கள் தீவிரமாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.