நியூயார்க்கில் மோடி-ட்ரம்ப் இன்று சந்திப்பு.. வர்த்தக சிக்கல் உட்பட பல விவகாரங்கள் பற்றி பேச திட்டம்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (யு.என்.ஜி.ஏவின் 74 வது அமர்வு) கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உரையாற்ற உள்ளார். பின்னர் பல இருதரப்பு ஆலோசனைகளையும் அவர் நடத்துவார்.
அப்போது இந்திய பிரதமர் மோடியையும், சந்திக்க உள்ள ட்ரம்ப், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது. இதில் வளர்ந்து வரும் இருதரப்பு வர்த்தக உரசல்கள், சாத்தியமான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகள் பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சந்திப்பு நியூயார்க் உள்ளூர் நேரப்படி மதியம் 12.15 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு) தொடங்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் ஒன்றாக பங்கேற்றாலும், அது ஒரு பொது நிகழ்வாக நடைபெற்றதால், பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இன்று இரவு 12 மணிக்கு (இந்திய நேரம்) நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மேடையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். இருவரும் கைகோர்ப்பார்களா அல்லது ஒருவருக்கொருவர் புறக்கணிப்பார்களா என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் பங்கேற்க வந்துள்ள மோடியும், இம்ரான் கானும் இன்று இரவு 12 மணியளவில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே ஜம்மு-காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அதிகரித்த பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் மோடியும் இம்ரான் கானும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்திக்கப் போகிறார்கள்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வழங்கும் மதிய உணவில் இரு தலைவர்களும் ஒன்றாக உணவருந்த உள்ளனர்.
நேற்று, இம்ரான் கான் டிரம்பை சந்தித்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்த உதவி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு தரப்பினரும் அதை ஏற்றுக் கொண்டால்தான் மத்தியஸ்தம் சாத்தியம் என்று டிரம்ப் கூறிவிட்டார்.