இந்தியா- சீனா எல்லை.. டிரம்பின் அறிவை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி.. புத்தகத்தில் தகவல்
வாஷிங்டன்: சீனாவுடன் இந்தியா எந்த எல்லையையும் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை கேட்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்து ராஜினாமா செய்துவிடும் மனநிலைக்கு வந்ததாக இரண்டு முறை புலிட்சர் விருது வென்ற அமெரிக்க எழுத்தாளர் தான் எழுதிய புதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் அடிக்கடி வெளிநாடுகளில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு, ராஜாங்க ரீதியான உறவுகள் குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஒரு சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் உங்கள் நாட்டு எல்லையில் சீனா இருப்பது போல் தெரியவில்லையே என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்த ராஜினாமா செய்யும் மனநிலைக்கு போய்விட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர்கள் பிலிப் ரக்கர் மற்றும கரோல் லியோனிங் ஆகியோர் தி வெரி ஸ்டேபிள் ஜீனியஸ் என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்கள்,
இது ஒரு புரளி.. ஏமாற்று வேலை.. பதவி நீக்க நடவடிக்கை விசாரணை குறித்து கொதிக்கும் டிரம்ப்
டிரம்பின் விளக்கங்கள்
டிரம்பின் புத்திசாலித்தனம் குறித்து அவரது சொந்த விளக்கம் என்ற பெயரில் இந்த புத்தகத்தை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
மோடி அதிர்ச்சி
பத்திரிக்கையாளர்கள் ரக்கரும் லியோனிங்கும் எழுதியுள்ள அந்த புத்தகத்தில் "டிரம்பின் சில கருத்துக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும் கவலையும் அடைந்து அங்கிருந்து வெளியேறி சென்றதாக அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஒருவர் கூறினார். வெளியே சென்ற பிரதமர் மோடி, இவர் சீரியஸான மனிதர் இல்லை. இவரை கூட்டாளராக நம்ப முடியாது என்று தெரிவித்தார்" என்றும் உதவியாளர் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
பின்னடைவு
அந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க தலைமை உடனான இராஜதந்திர உறவுகளில் இந்தியா "ஒரு படி பின்வாங்கியது" என்று அதிபர் டிரம்பின் உதவியாளர் புத்தகத்தின் ஆசிரியர்களிடம் கூறியிருக்கிறார்.
தெளிவு இல்லை
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பலமுறை சந்தித்துள்ளனர், இந்த சந்திப்புகளில் பத்திரிக்கை ஆசிரியர்கள் விவரித்த கருத்து எந்த சந்திப்பில் நடந்தவை என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
பிப்ரவரியில் வருகிறார்
இதனிடையே இந்தியாவும் அமெரிக்காவும் இந்தியாவுக்கு டிரம்ப் வருகைக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன, ஒருவேளை பிப்ரவரியில் டிரம்ப் வரலாம் என்று சொல்கிறார்கள். அப்படி வந்தால் டிரம்ப் 2016ல் அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வருவதாக அமையும்.
நிப்பிள் என உச்சரிப்பு
ஆசிய துணைக் கண்டத்தின் புவியியல் குறித்த டொனால்ட் டிரம்பின் அறிவு இதற்கு முன்னரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேபாளமும் பூட்டானும் இந்தியாவில் இருப்பதை அறிந்திருப்பதாக கூறினார். அப்போத அவர் "நேபாளத்தை 'நிப்பிள்' என்று தவறாக உச்சரித்ததாகவும், பூட்டானை 'பட்டன் என்று உச்சரித்தாகவும் டைம் நிருபர் கூறியிருக்கிறார்.