எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்க பிரசிடென்ட்.. ஜோ பிடனிடம் சொன்ன இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள இந்திய உணவக உரிமையாளர்களுடன் அதிபர் ஜோ பிடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோவில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நீல் மற்றும் சமீர் இட்னானி ஆகிய இந்திய உணவகமாக Naanstop உரிமையாளருடன் உரையாடும் காட்சிகள் உள்ளன.
அந்த மீட்டிங்கில் என்ன நடந்தது. இதோ விவரம்:
அதிபர் அக்கறை
ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் Naanstop என்ற பெயரில் இந்திய வகை உணவகம் இயங்கி வருகிறது. அங்கு கொரோனா பரவல் காரணமாக முன்பு போல வியாபாரம் இல்லையாம். இந்த நிலையில்தான், சிறு மற்றும் குறு தொழில்முனைவோரின் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறார் ஜோ பிடன். அதன் ஒரு பகுதியாக, நீல் மற்றும் சமீரிடம் அவர் வீடியோ மூலம் விவாதித்துள்ளார்.
உங்கள் தேவை என்ன
அப்போது, புன்முறுவலுடன், கனிவாக காணப்பட்டார் ஜோ பிடன். தங்கள் வணிகம் கிட்டத்தட்ட 75 சதவீதம் குறைந்துவிட்டது என்று நீல், பிடனிடம், கூறினார். அவர் மேலும் கூறுகையில், 20 முதல் 25 ஊழியர்கள் வரை முன்பு பணியாற்றியதாகவும், தற்போது, 10-15 என்ற அளவுக்கு ஊழியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். "உங்கள் உணவக பிஸினஸ் துளிர்விட இப்போது உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தேவை என்ன?" என்று பிடன் பதிலுக்கு கேட்டார்.
ஊசி போட வேண்டும்
இதற்கு நீல் பதிலளிக்கையில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதே எங்களின் மிகப்பெரிய தேவை. அப்போதுதான் மக்கள் மீண்டும் வெளியே செல்ல முடியும் என்றார். அதேநேரம், ஜோ பிடன், சிறு வணிகங்களுக்கான மீட்பு திட்டம் இருப்பதாக குறிப்பிட்டு பேசினார். "சிறு வணிகங்களுக்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் மானியங்களை வழங்கும் ஒரு மீட்பு திட்டத்தை நான் வைத்துள்ளேன்," என்றார் பிடன்.
அதிக முதலீடு
"நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும், குறைவாக இல்லை. வைரஸைக் கையாள்வதைத் தவிர்த்து தனித்தனியாகவும் மீண்டும் தொழில்களை கட்டியெழுப்பவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பை நாங்கள் வழங்குவோம்," என்றும் அவர் கூறினார். இந்த வீடியோ பேஸ்புக்கில் இதுவரை 1.8 லட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது. அதிகம் பேரால் ஷேர் செய்யப்படுகிறது.
பணப் புழக்கம்
அமெரிக்க மீட்பு திட்டம் என்பது, கொரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்ட 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் தொகுப்பாகும். இது செயல்பாட்டுக்கு வரும்போது மக்கள் கையில் பணப் புழக்கம் ஏற்படும் என்று தெரிகிறது.