சுப்ரீம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வாஷிங்டனில் குவிக்கப்பட்ட ஸ்னைப்பர்கள்.. மாஸ் பாதுகாப்பு
வாஷிங்க்டன்: அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் தற்போது உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிலும் உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழா இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப் ஏற்கனவே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்.
பிடனுடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளார். வாஷிங்க்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடம் முன் இந்த பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.
பாதுகாப்பு
அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் தற்போது உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக கேபிட்டல் கட்டிடம் இருக்கும் வாஷிங்க்டன் டிசி பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவி ஏற்பின் போது தாக்குதல் அல்லது கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த தகவல்கள் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீக்ரெட் சர்வீஸ்
பிடனுக்கு தற்போதே சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் பதவி ஏற்பில் அசாம்பாவிதம் நடக்கலாம் என்று இவருக்கு சென்ற உளவு தகவல் காரணமாக, சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், பெட்ஸ் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிடன் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரமாக கேப்பிட்டல் கட்டிடம் முன்பு ராணுவம் குவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கேப்பிட்டல்
இந்த பதவி ஏற்பு விழா நடக்கும் கேப்பிட்டல் கட்டிடத்தின் மேற்கு வாயில் பகுதியில் இரண்டு முறை ஒத்திகை நடத்தப்பட்டது. முதல் முறை ஒத்திகையிலேயே இங்கு தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக உளவு சென்றது. இதனால் அங்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறை ஒத்திகையில் நினைத்து போல மேற்கு வாயிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது.
ஸ்னைப்பர்கள்
இந்த தீயின் மர்மம் இன்னும் அகலாத நிலையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. மக்களோடு மக்களாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளும், உளவு அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுதான் இந்த பதவி ஏற்பு விழா நடக்கும். இதுபோக 5 கிமீ சுற்றளவுக்கு சுற்றி சுற்றி ஸ்னைப்பர்கள், ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், சிறிய ரக ஏவுகணை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல்
கேப்பிட்டல் கலவரம் காரணமாக இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சில நிமிடம் முன்பு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வேகமாக விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தனர். கடைசியில் இந்த மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.
சோதனை
ஆனாலும் பாதுகாப்பு கருதி அதிபர் பதவி ஏற்பு நடக்கும் கேப்பிட்டல் பகுதியின் மேற்கு வாயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகிறார்கள். எல்லா பக்கமும் டிரோன்கள் மூலம் தீவிரமான சோதனைகள் நடந்து வருகிறது. அதிபர் பிடன் பதவி ஏற்று வெள்ளை மாளிகை செல்லும் வரை பதற்றமான சூழ்நிலையே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.