ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை.. கொரோனா இறப்பை தடுக்கவில்லை.. ஆய்வுக்கு பிறகு சொன்ன 'ஹூ'
வாஷிங்டன்: கிலியட் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர்கொரோனா மருந்து, நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் அல்லது உயிர்வாழும் வாய்ப்புகளில் சிறிதளவு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மருத்துவ பரிசோதனையில் கண்டறிந்துள்ளது.
சீனாவின் வூகானில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.
இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துள்ள மருந்துகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. ஆனால் எதுவுமே இதுவரை பெரிய அளவில் சாதகமான பதிலை தரவில்லை.
இறுதிகட்ட சோதனை
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள மருந்து, அமெரிக்காவின் ரெம்டெசிவர், சீனாவின் சினாவாக் பயோடெக் மருந்து, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி மருந்து என நான்கு மருந்துகளும் முதல் இரண்டு சோதனைகளில் நல்ல பலனை தந்ததாக கூறப்பட்டுள்ளன, ஆனால் பெரிய அளவில் ஏராளமானோருக்கு சோதனை செய்த பின்னரே, அதன் பலன் என்ன என்பது தெரியவரும். அந்த வகையில் அவை நான்குமே இறுதிகட்ட சோதனையை தொடங்கி உள்ளன.
ரெம்டெசிவிர் மருந்து
இந்நிலையில் அமெரிக்காவின் கிலியட் சயின்சஸ் இன்க்ஸின் ரெம்டெசிவிர்கொரோனா மருந்து, நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் அல்லது உயிர்வாழும் வாய்ப்புகளில் சிறிதளவு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) மருத்துவ சோதனை கண்டறிந்துள்ளது.
முக்கியமான மருந்து
கொரோனா சிகிச்சைக்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்து இதுதான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் ரெம்டெசிவரும் ஒன்றாகும்.
எந்தெந்த மருந்துகள்
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,266 நோயாளிகளிடம், ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து கலவையான லோபினாவிர் / ரிடோனாவிர் மற்றும் இன்டர்ஃபெரான் உள்ளிட்ட நான்கு சாத்தியமான மருந்துகளை பரிசோதித்து சோதனை முடிவுகளை மதிப்பீடு செய்து உலக சுகாதார அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இறப்பை தடுக்கவில்லை
இதன்படி கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடையே 28 நாள் இறப்பு விகிதம் அல்லது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றில் சிறிதளவு கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சோதனையின் முடிவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை, அதற்கு முன்னதாக medRxiv தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
கிலியட் சயின்ஸ் விளக்கம்
ஆனால் அதேநேரம் இந்த மாத தொடக்கத்தில், கிலியட் சயின்ஸ் நிறுவனம் அமெரிக்க ஆய்வு குறித்த தகவலை வெளியிட்டது. இதன்படி 1,062 நோயாளிகளை உள்ளடக்கிய சோதனை நடத்தப்பட்டது. மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடும் போதும் ரெம்டெசிவிர்மருந்து பெற்றவர்கள் குணமாகும் காலம் ஐந்து நாட்களாகக் குறைந்துள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் சீரற்றதாகத் தோன்றுகிறது. ஏனெனில் பல சீரற்ற, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து வலுவான ஆதாரங்களுடன், மருத்துவ இதழ்களில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியது.
சௌமியா சுவாமிநாதன்
எனினும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஆய்வுகள் குறித்து கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் ஆகியவை பயனற்றவை என நிரூபிக்கப்பட்ட பின்னர் ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டன, ஆனால் மற்ற மருந்துகளின் சோதனைகள் 500 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 30 நாடுகளில் தொடர்கின்றன. அடுத்தது என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். மே 1ம் தேதி அன்று அமெரிக்க. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து ரெம்டெசிவிர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது, பின்னர் பல நாடுகளில் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றது.